வெறும் வயிற்றில் தேன் சாப்பிடலாமா?: ஆயுர்வேத மருத்துவர் சுவாமிநாதன் பதில்
- Sunday, 09 September 2012 06:11
நான் இஞ்சினியரிங் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறேன்.
என் உடல் வெயிட் போடாமல் மெயின்டெயின் செய்ய, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் தேன் விட்டுக் குடிக்கிறேன். அடுத்து வெல்லம் சேர்த்த ஒரு எள் உருண்டை சாப்பிடுவேன். பிறகு சத்து மாவுக் கஞ்சி உப்பு போட்டு சாப்பிட்டு விட்டு சென்று விடுவேன். பின்னர் மதியம் டப்பா சாதம்தான். என்னுடைய இந்த உணவு முறை சரியா டாக்டர்? என 4தமிழ்மீடியாவின் சுருதி,ஆத்தூர் மின்னஞ்சல் வழி அனுப்பி வைத்த கேள்வியை ஆயுர்வேதா மருத்துவர் சுவாமிநாதனிடம் முன்வைத்தோம்.
வெறும் வயிற்றில் தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது சரியல்ல. காரணம் தேனீ பலவித பூக்களில் இருந்து தேனை சேகரித்து வருகிறது. அதில் விஷப்பூக்களும் அடக்கம். எனவே வெறும் வயிற்றில் தண்ணீரில் தேன் கலந்து குடிப்பதை விட, சாப்பிட்டபின் அவ்வாறு குடிப்பது நல்லது.
எள்ளுருண்டை சாப்பிடுவது நல்லதுதான். மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். சத்துமாவு காஞ்சியில் மோரோ, அல்லது பாலோ கலந்து பருகினாலும் நல்லதுதான். இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், கல்லூரிப் போகும் பெண்ணுக்கு இது சரியான உணவு முறை இல்லை. காரணம் கல்லூரியில் நீங்கள் அதிக உடல் அசைவுடன் இருப்பீர்கள். எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க காலையில் சுடசுட பருப்பு சாதம், மோர்க்குழம்பு, மிளகு ரசம் அல்லது மைசூர் ரசம், காய்கறிகள் சேர்த்த பொரியலுடன் வயிறு நிறைய சாப்பிட வேண்டும். அதன்பின் எடை கூடாமல் இருக்க தண்ணீரில் தேன் கலந்து பருகலாம்.
மதியம் சாதாரணமாக நீங்கள் என்ன சாப்பிடுவீர்களோ, அதையே சாப்பிடலாம். மாலை வேலைகளில் பழங்கள் சாப்பிடலாம். இரவு சப்பாத்தி, இட்லி என்று உங்கள் விருப்ப உணவை சாப்பிடுங்கள். எடை கூடாது, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
