பரமா : காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த கதை
- Tuesday, 25 September 2012 12:50
பி.என்.பி கிரியேஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் பரமா.
இப்படத்தில் ஹீரோவாக நிர்மல் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ’காண்டீபன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் இறுதிகட்ட தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் தனது இரண்டாவது படமாக இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
படத்தில் அவருக்கு ஜோடியாக 'காதல்பாதை', 'அகிலன்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த வித்யா மற்றும் லீமா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சாகருப்பு, கிரேன்மனோகர், நெல்லைசிவா, செவ்வாழை ராசு, கே.எஸ். பழனி,மாஸ்டர் பிரவீன், வேல்முருகன், கும்தாஜ், கலைராணி, மீனாள் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
’பரமா’ன்னா பயம் இருக்கணும். ஆனா இந்த பரமாவுக்கு ’பயமே கிடையாதுடா’ங்கிற ரேஞ்சில எப்போதும் ஊருக்குள் ஒரு உதவாக்கரை ரெளடியாக சுத்திக் கொண்டிருக்கும் ஹீரோ திடீரென்று உதவும் கரமாக மாறும்போது அவனுக்குள்ளும் ஒரு அழகான காதல் வருகிறது. அதை காதல், காமெடி, ஆக்ஷன் என கலந்து சொல்வதுதான் இந்தப் படத்தின் கதை.
படத்தில் வரும் ’டண்டக்க டண்டக்க தாளம் போடுது மனசு’ என்ற பாடலை அவன்இவன், உச்சிதனை முகர்ந்தால்..ஆகிய படங்களில் இனிமையான பாடல்களை பாடிய என்.கே. பிரியங்கா பாடியிருக்கிறார். இந்த ஆண்டின் மிகச்சிறந்த டூயட் பாடலாக இந்தப் பாடல் அமையும்.
பல குறும்படங்களை இயக்கிய ஜி.கே.லோகநாதன் கதை,திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், தமிழ் அமுதன் எழுதுகிறார்கள். படத்திற்கு ஜி.நல்லதம்பி இசையமைக்க, ஏ.காசிவிஸ்வா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை பிரேம் மேற்கொள்ள, நடனத்தை எஸ்.எல்.பாலாஜி, ரேவதிபாலகுமாரன் இணைந்து அமைக்கிறார்கள். கலை : கலைராஜ், தயாரிப்பு நிர்வாகம் : டி.ஸ்ரீதரன், இணை தயாரிப்பு : எம்.ஏ.ஆர். சந்திரன், தயாரிப்பு : எஸ்.நிர்மலாதேவி. இம்மாத இறுதியில் கும்பகோணம், தேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆரம்பமாகி ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெறுகிறது.





.jpg)