உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை தாக்கதிருந்தது. அன்டைநாடான சீனாவில் இந்த வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் தொகை 3000 மாகவும், வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் தொகை 80 ஆயிரத்துக்கும் அதிகமாகயிருந்த நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று மட்டுப்படுப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று உடையவர்களாக 28 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள 16 இத்தாலிய சுற்றுலாப் பயணிகளுடன் ஏற்கனவே கண்டறியப்பட்டவர்களையும் சேர்த்து 28 பேர் தொற்றுக்கு உள்ளாகியதை உறுதி செய்துள்ளனர்.
இந்தியா வந்த இத்தாலிய சுற்றுலாப் பயணிகன் 21 பேரில், 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்தோ-திபெத்திய எல்லையிலுள்ள சாவ்லா பகுதிக்க அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க; அனைத்து மாநிலங்களின் விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பினை உறுதி செய்ய வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, உரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாநிலங்களில் நோயாளிகளை தனிப்படுத்தி வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா அறிவுறுத்தியுள்ளார்.
இன்று டெல்லி அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்ஷ்வர்தன், டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிடமும், தனிமைப்படுத்தும் வார்டுகளை தரமான முறையில் உருவாக்குமாறு கோரியுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவத் தொடங்கினால், இந்திய மக்கள் பரம்பலில் அதனை மட்டுப்படுத்துவது இலகுவானதல்ல என பலக சுகாதார மையம் ஏற்கனவே அச்சம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
இதேவேளை இந்தியப் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையாக கூட்டம் கூடுவதை தவிர்க்க சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியிருந்தமை தொடர்பிலேயே தான் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.