அதிமுக கூட்டணிக்கு தற்போது பெரும் தலைவலி அதன் ஊழல் புரையோடிய 10 ஆண்டு கால ஆட்சி அல்ல; மாறாக பாஜகவுடன் அமைத்திருக்கும் கூட்டணி.எரிவாயும் சிலிண்டர் விலை 850 ரூபாய், பெட்ரோல் விலை 95 டீசல் விலை 90 என மாறியதுடன் சமையல் எண்ணேய் விலையை 60 சதவீதம் உயர்த்தியதும் நடுத்தர வர்க்க மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.
பாஜகவின் மதவாதத்தை விட இந்த கடும் விலைவாசி ஏற்றத்தைத் தான் தற்போது மக்கள் கடும்கோபத்துடன் மனதில் வைத்திருக்கிறார்கள். இதனால் அதிமுகவால் தனது பரப்புரையில் மோடியின் படத்தைப் பயன்படுத்த முடியவில்லை.’என தமிழகத்தின் முன்னணி பொருளாதார அறிஞரான ஜெயரஞ்சன் தெரிவித்திருக்கிறார். இதை உண்மை என்று ஆக்குவதுபோல, மோடி கலந்துகொண்ட பரப்புரைக் கூட்டங்கள் தவிர, வேறு அதிமுகவின் சுவர் விளம்பரங்கள், பத்திரிகை விளம்பரங்கள் என எதிலும் மோடியின் படங்களைப் பயன்படுத்தவில்லை. சுவர் விளம்பரங்களில் வரையப்பட்ட மோடியின் உருவத்தையும் அழித்திருக்கிறார்கள்.
பாஜகவின் அடையாளங்களை அதிமுக காட்டிக்கொள்ளாத அதிமுகவின் இந்த விநோத வியூகம் எடுபடுமா என்பதுதான் இப்போது தமிழகத் தேர்தல் களத்தில் கேட்கப்படும் கேள்வி. மோடியை மட்டுமல்ல; பிற பாஜக தலைவர்கள் படத்தையும், சின்னத்தையும் போட்டு ஓட்டுக் கேட்டால் விழுகிற ஓட்டும் விழாதோ என்ற அச்சத்தை தமிழகம் முழுவதுமே அதிமுகவினரிடம் பார்க்க முடிகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியின் இந்த நிலையை நெட்டிசன்கள் நன்றாகவே கிண்டலடிக்கிறார்கள். “ஊராடா இது... சொந்தக் கட்சியோட தேர்தல் அறிக்கையை சொல்ல முடியல... சின்னத்தையும், தலைவர் படத்தையும் காமிச்சி ஓட்டுக் கேட்க முடியல...” என்று ஒருபக்கம் கட்சியினர் புலம்ப, ‘போட்டி போடுறது பிஜேபி வேட்பாளர்... ஆனா, போஸ்டர்ல இருக்கிறது எல்லாம் அதிமுக தலைவர்கள். நல்லா இருக்குடா உங்க டீலிங்...’ என்று இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள்.
இன்னும் சிலர் ஒருபடி மேல் போய், ‘மோடியின் படத்தைப் போட்டு போஸ்டர் அடித்த பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் - இப்படி ஒரு செய்தி வந்தாகூட ஆச்சரியமில்லை’ என்கிறார்கள். இதற்கிடையில், பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்த பிரதமரை வழக்கம்போல #கோபேக் மோடி என்ற ஹேஷ்டேகில் மீம்ஸ்களூம், கருத்துகளும் பதிவிட்டு தெறிக்கவிட்டார்கள் சமூகவலைவாசிகள்.
இதில் #கோபேக் மோடி ஹேஷ்டேகை பிரபலம் செய்வதில் திமுக, அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி வேறு! எது எப்படியோ.. சமூகவலைதளம் என்பது இன்று ஒவ்வொரு கட்சியும் திட்டமிட்டு தங்களுக்கான கருத்துகளைப் பரப்பப் பயன்படுத்தினாலும் நடுநிலை வகிக்கும் சமுகவலைவாசிகளின் கருத்துகளை உதாசீனப்படுத்துவதற்கில்லை!
- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்