நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு பற்றி பகிரங்கமாக விவாதிப்பதற்காக தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.
கொலை, ஊழல், மோசடி, திருட்டு ஆகியவை பற்றி அல்லாமல், நாட்டின் கடன் மற்றும் பொருளாதார நிலவரம் பற்றி மட்டுமே விவாதிக்கவுள்ளதால், முன்னாள் ஜனாதிபதி பயமின்றி விவாதத்தில் கலந்து கொள்ளலாமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதி அமைச்சர் ஒருவர் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் விவாதத்துக்கு செல்வதா எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளபோதும், தான் அதனை பொருட்படுத்தாமல் விவாதத்துக்கு தயாராகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி மற்றும் ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ நீண்டகாலம் இந்த நாட்டின் நிதி அமைச்சராக இருந்துள்ளார். இதனால் அவருக்கு நாட்டின் பொருளாதார நிலைமை நன்கு புரியும். எனவே அவர் யாரோ எழுதிக் கொடுப்பதனை வாசிக்காமல், என்னுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு வர வேண்டும்.
அடுத்த 12 வருடங்களுக்குள் செலுத்த வேண்டிய கடனை எடுத்துப் பார்த்தால், ராஜபக்ஷ குடும்பத்தினரும் நண்பர்களும் எடுத்துக் கொண்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்கே பெருந்தொகையை செலவிட வேண்டியுள்ளது.
இதனடிப்படையில், 2019ஆம் ஆண்டில் அரசாங்கம் 4.2 ட்ரில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. அதில் 77 சதவீதம் கடன்கள் ராஜபக்ஷ யுகத்தில் பெறப்பட்டவையாகும். 2020இல் அரசாங்கம் 3.7 ட்ரில்லியன் ரூபாவையும் 2021இல் 3.4 ட்ரில்லியன் ரூபாய்களையும் அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
அத்துடன் கடும் வறட்சி, பாரிய வெள்ளம் மற்றும் கடன் சுமையுடன் நாட்டைப் பொறுப்பேற்ற இந்த அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களுக்குள் பொருளாதாரத்தில் பாரிய வெற்றியை ஈட்டியிருக்கின்றது.
நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் கூடி வருவதாகவும் மஹிந்த ஆதரவு அணியினர் மக்களிடத்தே பொய்யான தகவல்களை மந்திரம் போன்று மீண்டும் மீண்டும் உச்சரித்து வருகின்றனர். உண்மையில் வாழ்க்கைச் செலவு 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்திருக்கின்றது.” என்றுள்ளார்.