‘தமிழ் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாமல் இருப்பதற்கு, தேர்தல்களில் மக்கள் தவறானவர்களை தெரிவு செய்து வருகின்றமையே காரணம்’ என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வலிகாமம் கிழக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த காலங்களில் மாகாண சபையின் ஊடாக பல்வேறு திட்டங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அவை எவையும் கைகூடவில்லை என்று இங்குள்ள மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், மக்கள் பிரதிநிதிகளை குற்றஞ்சாட்டுவதை தான் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனெனில், கடந்த காலங்களில் தவறான பரப்புரைகளை நம்பி தவறான திசையில் மக்கள் சென்றிருந்தனர். அதனால், எமக்கு போதுமான அதிகாரங்கள் கிடைக்கவில்லை. ஒரு மட்டுப்படுத்த அளவிற்கு மேல் என்னால் சாதிக்க முடியவில்லை. எனவே, எதிர்காலத்திலாவது மக்கள் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு செயற்பட்டால் எதிர்வரும் சில வருடங்களுக்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் என்னால் தீர்க்க முடியும்.” என்றுள்ளார்.