ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில், உயர்நீதிமன்றினால் இன்று செவ்வாய்க்கிழமை அவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது.
ரஞ்சன் ராமநாயக்க சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக இருந்த வேளையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் எனும் தெரிவித்ததாக அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவரது கருத்தின் மூலம் நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கை சீர்குலைந்து விட்டதாக தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவர் ஆகியோரால் உயர்நீதிமன்றத்தில் குறித்த வழக்குத்த தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய சட்ட மா அதிபரால், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே, அவருக்கு எதிரான தீர்ப்பு உயர்நீதிமன்றத்தினால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நீர்கொழும்பு பல்லன்சேனவிலுள்ள இள வயது குற்றவாளிகளைத் தடுத்து வைக்கும் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.