மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தெளிவானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எமது தேர்தல் பிரசாரத்திற்கு அமைய விருப்பு வாக்கு முறைமையை நீக்கவும், 70 வீதம் தொகுதிவாரி முறைமையினடிப்படையிலும் 30 வீதம் விகிதாச்சார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்.
அதற்கமைய கடந்த 15 வருடங்களாக அவதானம் செலுத்தப்பட்ட விடயத்திற்கு ஏற்ப தொகுதிகளை எவ்வாறு நிர்ணயிப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டு வெகு விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். அமைச்சரவையிலும் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் வெகு விரைவாக நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.” என்றுள்ளார்.