மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தும், வன்முறை மிக்கதாகவும் மாறி வருகின்றது.
மாண்டலேவில் போராட்டக் காரர்கள் மீது போலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
மியான்மாரில் கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் போராட்டக் காரர்கள் மீது இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் முதலாவது நபராக 20 வயது இளம்பெண் தலையில் குண்டு பாய்ந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் பொது மக்கள் மீதான மியான்மார் இராணுவத்தின் தாக்குதல்களை ஐ.நா சபையும் பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன. முன்னதாக இராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் சுமார் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற நேரிடும் என மியான்மார் இராணுவ அரசு பொது மக்களை எச்சரித்திருந்தது.
இத்தனை அழுத்தத்துக்கு மத்தியிலும் ஞாயிற்றுக்கிழமை மியான்மாரின் முக்கிய நகரங்களில் மேலும் ஆயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடித் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மியான்மார் அரசின் பிரதான முகநூல் வலைப் பக்கத்தை ஞாயிற்றுக்கிழமை பேஸ்புக் நிறுவனம் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் பொது மக்கள் மீதான வன்முறை மற்றும் அடக்குமுறை போன்றவை தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காகவே Tatmadaw என அழைக்கப் படும் மியான்மார் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தகவல் பக்கத்தை நீக்கியிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்