நேபாளில் பஸ் விபத்து பலர் பலி
- Wednesday, 12 September 2012 05:19
திங்கட்கிழமை மாலை மேற்கு நேபாளில் காளிகோட் மாவட்டத்தில் உள்ள மலைச்சாரலில் பேருந்து ஒன்று கவிழ்ந்து சுக்கு நூறானதில்
27 கும் மேற்பட்ட பயணிகள் பலியானதாகவும் 11 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப் பேருந்து கர்னாலி அதிவேகப் பாதையில் போய்க் கொண்டிருந்த போது ஆற்றுப் படுக்கை ஒன்றின் அருகே மிகக் குறுகலான வளைவில் கட்டுப்பாட்டை இழந்து மிக ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளது.
இவ் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. நேபாளின் அதிவேகப் பாதைகளில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. இதற்கு காரணமாக பாதைகளின் மோசமான நிலையும், ஒழுங்காகப் பராமரிக்கப் படாத வாகனங்களும், கவனக்குறைவான ஓட்டுதலும் கூறப்படுகின்றன.
ஞாயிற்றுக் கிழமை மத்திய நேபாளில் மலைப்பாதை ஒன்றில் பஸ் வண்டி ஒன்று சரிந்ததில் 13 பேர் கொல்லப் பட்டிருந்தனர். ஜூலை மாதம் நேபாளின் தென்மேற்குப் பகுதியில் இதே போன்று மிக அதிக நெரிசலுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று ஆற்றில் விழுந்து 38 யாத்திரீகர்கள் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
