பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிரான வன்முறையில் 23 பேர் பலி
- Saturday, 22 September 2012 14:17
அமெரிக்காவில் வெளியான இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் நாடளாவிய எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இக்கலவரத்தின் போது அடித்து உடைக்கப்பட்ட பொருட்களால் மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் பெறுமதியான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கராச்சியில் இடம்பெற்ற வன்முறையில் 14 பேர் கொல்லப் பட்டும் 110 பேர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் இஸ்லாமாபாத், கராச்சி, மற்றும் பெஷாவர் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற வன்முறையில் மொத்தமாக 200 இற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெஷாவரில் ஒரு ஊடகவியலாளரும், 5 ஊழியர்களும் பலியாகியுள்ளனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கி பாவித்ததற்கான ஆதாரமும் உள்ளது. பல இடங்களில் கடைகள், வியாபார ஸ்தானங்கள் என்பன சூறையாடப்பட்டும், சினிமா தியேட்டர்கள் எரிக்கப்பட்டும் உள்ளன.
இதேவேளை பாகிஸ்தானில் இதற்கு முன்பு காபுல் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னர் அரசு மக்களை அமைதி காக்கும் படியும் பொறுமையாகவும் உணர்ச்சிவசப் படாமலும் பேரணியை நிகழ்த்துமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன் வெள்ளிக்கிழமை இதற்காக விடுமுறையும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
