செவ்வாய்க் கிரகத்தில் நீரோடைகள்? - கியூரியோசிட்டியின் புதிய புகைப்படங்களில் தெளிவு
- Friday, 28 September 2012 16:38

செவ்வாய்க் கிரகத்தில் தற்போது ஆய்வு நடத்தி வரும் கியூரியோசிட்டி விண்வண்டி சமீபத்தில் அனுப்பிய புகைப்படங்களில் அங்கு
ஆதிகாலத்தில் நீரோடைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இப் புகைப்படங்களில் கிரவெல் கற்களும் மணலும் சேர்ந்து உருவான பாறைப் படிமங்கள் காணப்படுகின்றன.
இப்படிமங்களில் உள்ள கோள வடிவமான குறுணிக் கற்களை அவதானிக்கும் போது அவை நீரோட்டத்தால் அடித்து வரப்பட்டவை போலுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். செவ்வாயின் தரையில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்நீரோட்டங்கள் நீண்ட காலத்துக்கு நிலைத்து இருந்திருக்கும் எனக் கருதுவாக நாசா அமைப்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அணுசக்தி மூலம் தொழிற்படும் கியூரியோசிட்டி ரோவர் விண்வண்டி குறித்த இந்த நீரோடைகளில் இருந்து மண் மாதிரிகளைச் சேகரித்து அதன் உள்ளேயுள்ள ஆய்வுகூடத்தில் அவற்றை பரிசோதனை செய்து அதன் இயல்புகளைப் பூமிக்கு அனுப்பவுள்ளது. இந்நடவடிக்கையில் மிகச் சிறந்த மண்மாதிரியை இந்த ரோவர் விண்வண்டி தெரிவு செய்யும் வரை விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர்.
இப் பரிசோதனைகளின் பிரதான நோக்கம் செவ்வாயில் நீர் மற்றும் நுண்ணுயிர் வாழ்க்கை உள்ளதா என அறிவது மட்டுமல்லாது அங்குள்ள கால நிலை சக்தி நிலைகள் மற்றும் கார்பன் வாயுவின் செறிவு என்பவற்றையும் அறிவதாகும்.
இவற்றையும் காண்க ;
- ஹபிள் தொலைக்காட்டியால் எடுக்கப் பட்ட பிரபஞ்சம் பற்றிய அதியுயர் படங்கள்
- ஒளியின் வேகத்தை மிஞ்சி நட்சத்திரங்களுக்குப் பயணிக்க முடியுமா? - சாத்தியம் என்கிறது நாசா
- நட்சத்திரப் பயணங்கள் 24 : பிரபஞ்சவியல் 7 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் II)
