இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.
1921-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி பிறந்த அவரது நூற்றாண்டு அடுத்த வருடம் வரவுள்ளது. சத்யஜித் ராயின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் அவர் உருவாக்கிய வங்காள இலக்கியத்தின் மறக்க முடியாத கதாபாத்திரங்களைக்கொண்டு உருவாக்கப்படும் திரைப்படத்தை அவரது மகன் சந்தீப் ராய் இயக்கவுள்ளார்.
சத்யஜித் ராய் தனது தாத்தாவும் அப்பாவும் நடத்தி வந்த காமிக்ஸ் பத்திரிகைக்கு சத்யஜித் ராய் வரைந்து உருவாக்கிய கதாபாத்திரங்கள் பல. அவரது கதாபாத்திரம் ஒன்றை வைத்தே ஹாலிவுட்டில் ‘ஈடி’ என்ற படத்தை இயக்கினார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அதற்காக காப்புரிமை வழக்கும் நீண்டகாலம் நடந்ததுடன் சத்யஜித் ராய்க்கு இழப்பீடும் வழங்கப்பட்டது.
ராயின் ஓவியக் கை வண்ணத்தில் பெலூடா மற்றும் பேராசிரியர் ஷோங்கு கதாபாத்திரங்கள்
சத்யஜித் ராய் ஓவியர் என்பதைத் தாண்டி நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கான கதைகளையும் துப்பறியும் கதைகளையும் எழுதியிருக்கிறார். அவர் 1965-ஆம் ஆண்டு, ஒரு சிறுவனையும் அவனது மூத்த ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனையும் கதாபாத்திரங்களாகக்கொண்டு ஒரு துப்பறியும் சிறுகதையின் முதல் வரைவை எழுதினார். அந்த ஒன்றுவிட்ட சகோதரன் தான் பெலூடா என்ற பிரதோஷ் சந்திர மித்ரா. வங்காள இலக்கிய வாசகர்களின் ஒட்டுமொத்த இதயங்களையும் அந்தக் கதை வென்றெடுத்தது. அந்தக் கதை எழுதப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், சினிமா, தொலைக்காட்சி போன்ற பிரபலமான ஊடகங்களில் பெலூடாவை மையப்படுத்திய எந்த படைப்பும் உருவாகவில்லை. காரணம் சத்யஜித் ராயின் மகன் அதற்கான உரிமையை விற்க மறுத்துவிட்டார். அதேபோல அந்தக் கதையில் வரும் பேராசிரியர் ஷோங்கு ஒரு வங்காள விஞ்ஞானி மற்றும் கண்டுபிடிப்பாளர் கதாபாத்திரமும் புகழ்பெற்ற ஒன்று. மேற்கத்திய ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்துக்கு இது சற்றும் குறைந்தது அல்ல.
ராயின் கை வண்ணத்தில் ஸ்பீல்பெர்க் எடுத்தாண்ட ஏலியன் கதாபாத்திரம்
எழுத்தாளராகவும் ஓவியராகவும் புகழ்பெற்ற பின்னர் திரையில் நுழைந்து சத்யஜித் ராய் இயக்கிய பதேர் பாஞ்சாலி, அபு சன்ஸார், ஜல்ஸா கர், தி பிக் சிட்டி, சாருலதா போன்ற திரைப்படங்களைக் காவியங்களாக உருவாக்கி உலக அரங்கில் இந்திய சினிமாவின் மதிப்பை உயர்த்தினார். 1992-ஆம் ஆண்டு சத்யஜித் ராய்க்கு அவரின் ஒட்டுமொத்த சினிமா சாதனைக்காக, கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. என்றாலும் அந்த விருதுகளை எல்லாம் மிஞ்சும் வகையில் தந்தைக்காக தனது நூற்றாண்டு அஞ்சலியை திரைப்படம் வாயிலாகச் செலுத்த முன்வந்துவிட்டார் சந்தீப் ராய்.
- 4தமிழ்மீடியவுக்காக மாதுமை
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்