இராகு கேது பெயர்ச்சிப் பலன் : கன்னி
- Saturday, 15 September 2012 00:31
பிறரிடம் நல்அன்பை வெளிப்படுத்தும் கன்னி ராசி அன்பர்களே உங்களின் மென்மையான குணத்தால் அனைவரையும் கட்டிப் போட்டு விடுவீர்கள்.
மேலும் அனைவரையும் சீக்கிரமாகவே நம்பும் வெள்ளைமனம் கொண்டவர்கள் நீங்கள்.
இதுவரை உங்களது ராசிப்படி தைரிய வீர்ய ஸ்தானமான மூன்றாமிடத்தில் ராகுவும், பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தில் கேதுவும் அமர்ந்து இருந்தார்கள். இனி கேது ஆயுள்ஸ்தானமான 8ம் இடத்திற்கும், ராகு தனவாக்கு குடும்பஸ்தானமான 2ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
கிரகங்களின் பார்வை: ராகு சுகஸ்தானத்தையும், ஆயுள்ஸ்தானமான எட்டாமிடத்தையும், விரையஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தையும் பார்க்கிறார். கேது தனவாக்குக்குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தையும், ரண்ருணரோக ஸ்தானமான ஆறாமிடத்தையும், கர்மஜீவனஸ்தானமான பத்தாமிடத்தையும் பார்க்கிறார்.
குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நிகழும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லை ஒழியும். தம்பதிகளிடையே அன்பு மலரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை சேர்ப்பீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடி வரும். மனப்பிரச்சனைகள் விலகும். உங்களின் குழந்தைகளால் உங்களுக்குப் பெருமை கிடைக்கும். காதல் விஷயத்தில் வெற்றி அடையலாம். பயணம் செய்யும்போது கவனமுடன் செல்லவேண்டும். மாமியார் மருமகளுக்கிடையில் வருத்தம் உண்டாகலாம். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். முழுமையான யாத்திரையை மேற்கொள்ளுங்கள்.
புதியதாக வீடு, நிலம் ஏதேனும் வாங்கினால் பத்திரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து வாங்குங்கள். உங்களுடைய பொருட்கள் திருடு போகாமல் இருக்க கவனம் தேவை. பிறரிடம் பேசும்போதும், அறிவுரைகள் கூறும்போதும் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது. இதன்மூலம் வீணான விரோதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் வாழ்க்கைத்துணை உறவினர்களிடம் வீண் வம்பு சச்சரவுகள் வரலாம். உங்களால் முடிந்தால் மட்டும் வாக்கு கொடுக்கவும்.
மாணவர்கள், கணிணி சம்பந்தமான படிப்பு மேன்மையைத் தரும். படிப்பினில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் சிந்தனைகளையும், வளர்ச்சியையும் தடுக்கும் காதல் போன்ற விஷயங்களில் ஈடுபடுதல் கூடாது. கெட்ட சகவாசம் வேண்டாம். மேற்படிப்பிற்கு நீங்கள் விரும்பிய துறை கிடைக்கும். கிடைத்த வாய்ப்பை நன்றாக முயற்சி எடுத்து படிப்பதன் மூலம் உங்கள் வளர்ச்சி மேன்மையுறும். கலைத்துறையினருக்கு ஒப்பனையாளார்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடல் சம்பந்தப்பட்டவர்கள், நடனக் கலைஞர்கள் போன்ற துறைகளில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.
நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல காலமாக இது அமையும். வியாபாரிகளுக்கு பதிப்பகம், பிரிண்டிங் துறை சார்ந்த அன்பர்கள், எழுத்து சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.
வீண் அலைச்சல் மற்றும் வீண் விரையம் இனி ஏற்படாது. நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்யும் முன் நண்பர்களுடன் கலந்தாலோசிக்கவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். நீங்கள் திட்டமிட்டு செய்த காரியங்கள் இனி மெல்ல நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உங்களுக்கு இருக்கும் போட்டியாளர்களால் இனி தொந்தரவு இருக்காது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் இனி இருக்காது.
நூலகம், அஞ்சல் துறையினர் மற்றும் தகவல் தொழிற்நுட்பம் துறைகளில் பணிபுரிபவர்கள் சிறப்பு பெறுவர். வேலையில் இருந்து கொண்டே உபதொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் காணலாம். வாகனங்களை வைத்திருப்பவர்கள் சரியான முறையில் பராமரிப்பு செய்தல் அவசியம். இல்லெயேல் வீண் செலவுகள் வரலாம். விவசாயிகள் பழம் மற்றும் பூந்தோட்டத்தில் நல்ல வருவாய் காணலாம். ஏற்றுமதி சம்பந்தப்பட்ட இனங்களில் முதலீடு செய்வதும் நன்மையைத் தரும். உங்கள் தொழிலில் புதிய முறைகளை கையாளுவீர்கள். நல்லபெயர் கிடைக்கும். சில நேரங்களில் உங்கள் பணிகளில் தொய்வும், அதன்மூலம் மனதில் லேசான வருத்தமும் ஏற்படலாம். அதற்காக வருந்த வேண்டாம். அவையெல்லாமே தற்காலிகமாக தோன்றி பின் மறைந்து போகும்.
பெண்களுக்கு, நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நீங்கள் விரும்பிய இடத்திற்கு பணிஇடமாறுதலும், பதவி உயர்வும் கிடைக்கும். பண விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்கள் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டி வரும்.
அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த காலகட்டம் இது. நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். “பதறாத காரியம் சிதறாது” என்பதற்கேற்ப எதிலும் பதற வேண்டியதில்லை. சில வேண்டாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரலாம். அது போன்று வருவதற்கு வாய்ப்புகளைக் கொடுக்காதீர்கள். உடல்நலத்தைப் பொறுத்தவரை அலர்ஜி சம்பந்தப்பட்ட நோய் வரலாம். அதை அலட்சியமாக விட்டுவிட வேண்டாம். அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது.
பரிகாரம்: புதன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் ராகுவிற்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். சனிக்கிழ்மைதோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.
4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
