Thursday, May 23rd

Last update03:51:00 PM

இராகு கேது பெயர்ச்சிப் பலன் : கடகம்

எந்த நேரத்திலும் மனதில் பட்டதை தயக்கமின்றி சொல்லும் கடக ராசி வாசகர்களே நீங்கள் எப்போதும் அன்புக்கு கட்டுப்பட்டுவர்கள். தன் குடும்பத்தினரிடம் அதீத பாசம் காட்டுவீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தில் கேதுவும், பூர்வபுண்ணியஸ்தானமான 5ம் இடத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது ஜீவனஸ்தானமான 10ம் இடத்திற்கும், ராகு சுகஸ்தானமான 4ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

கிரகங்களின் பார்வை:

ராகு தனவாக்குகுடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தையும், ரணருணரோகஸ்தானமான ஆறாமிடத்தையும், ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தையும் பார்க்கிறார். கேது சுகஸ்தானமான நான்காமிடத்தையும், ஆயுள்ஸ்தானமான எட்டாமிடத்தையும், மோக்ஷஸ்தானமான பன்னிரெண்டாமிடத்தையும் பார்க்கிறார்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை இனிமேல் இருக்காது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடத்தில் அன்பாகப் பழகவும். புதிய வீடு கட்டலாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். திசைபுக்தி அனுகூலமிருப்பின் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். பரம்பரைச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.  உறவினர்களிடம் மென்போக்கை கடைபிடிக்கவும். வீண் விரோதம் வேண்டாம். உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் பழகுங்கள். அவர்களிடம் பாசம் அதிகரிக்கும்.

நெருப்பு மற்றும் எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும் போது கவனம் தேவை. மருத்துவரின் தெளிவான ஆலோசனைக்குப் பின்னரே எந்த மருந்தையும் உட்கொள்வது நல்லது. சரியான நேரத்தில் மருந்தினை உட்கொள்வதும் நன்மையைத் தரும்.

கணிணி, சட்டம், எலக்ட்ரிக்கல் மற்றும் சமையற்கலை சம்பந்தப்பட்ட படிப்பினில் உள்ள மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். அடுத்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம். உங்களின் கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் படிப்பில் இடையூறு வரலாம். கெட்டவர்களின் சகவாசத்தை முற்றிலுமாக விட்டொழிக்கவும்.

இசை அமைப்பாளர்கள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட டெக்னிக்கல் துறையில் சார்ந்தவர்கள் மேன்மை அடைவர். பிற நாடுகளுக்கு சென்று பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. புகழ் பாராட்டு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். காத்திருந்து கடமைகளை சரியாக செய்பவர்களுக்கு வெற்றிக்கனி கிடைக்கும். வெளியூர் படப்பிடிப்புக்கு செல்லும்போது அலைச்சலும் அதன்மூலம் வேலைப்பளுவும் மனதில் சோர்வும் ஏற்படும். சிலர் போட்டியாளர்கள் மூலம் சில பிரச்சனைகள் சந்திக்க வேண்டி வரலாம்.

வியாபாரிகள் புதிய தொழில் தொடங்கும் போது தகுந்த ஆலோசனைகளின் பேரில் ஆரம்பிக்கவும். பண கஷ்டம் இருக்காது. ஆனால் தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். மருந்து, சமையல், சிமெண்ட், மற்றும் விவசாயத்திற்குத் தேவையான பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு மிக அருமையான முன்னேற்றம் ஏற்படும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அதற்கேற்ற பலன்களும் உடனே கிடைக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் முன் தகுந்த ஆலோசகரிடம் விவாதித்து செய்யவும். மனைவி பெயரில் தொழில் தொடங்கினால் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பதில் பணம் பண்ணுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நம்பிக்கைக்கு உரிய ஆட்கள் வேலைக்கு கிடைப்பார்கள். வாகனங்களை முறையாக பராமரித்தல் அவசியம். அதன் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். உங்கள் மீதான மதிப்பு மரியாதைக்குண்டான பங்கம் விளைவிக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம். செய்தொழிலில் மந்தம் இருந்தாலும் நல்ல அனுபவமாகவே அது அமையும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.

மருத்துவம், ராணுவம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் தனியார் துப்பறியும் துறையினருக்கு மிகுந்த நன்மைகள் நடக்கும் காலகட்டமிது. பதவி உயர்வில் சிறிது கால தாமதம் ஏற்படலாம். “தன் கையே தனக்குதவி” என்ற மந்திரசொல்லுக்கேற்ப உங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டு உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் நீங்கள் வேலையை விடுவது நன்மையில்லை. உப தொழில் செய்யும் விருப்பமுடையவர்கள் வேலை பார்த்து கொண்டே செய்வது நல்லது.

கஷ்டம் என்பது கானல் நீர் போன்று காணாமல் போகும். 2013 மே மாதத்திற்குப் பிறகு வேலை இல்லாதவர்களுக்கு உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சிறந்த வேலை கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பொதுவில் நன்மையே நடக்கும். திருமண வயது வந்தும் திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் அதனால் உயர்பதவி கிடைக்கும்.

ஆரம்பரச் செலவை குறைக்கவும். அவ்வப்போது ஒருவித சோர்வு ஏற்படலாம். அதை தகுந்த நபர்களிடம் திட்டமிட்டு சரிசெய்யவும். எந்தப் பிரச்சனையானாலும் பொறுமையுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் செயல்படுங்கள். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு, நீங்கள் உழைத்த அளவுக்கு பதவிகள் எதிர்பார்த்த அளவிற்குக் கிடைக்காமல் போகலாம். பொறுமையாக உங்கள் கடமைகளைச் சரியாக செய்யவும். உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். உங்களின் குடும்ப சூழ்நிலை நன்றாக இருந்தால்தான் அரசியல் சூழ்நிலையும் சிறப்பாக இருக்கும். எனவே குடும்பத்தினரிடம் அன்பாகப் பழகுங்கள். நெருப்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக கையாளவும்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த மருத்துவ செலவு குறையும். மனதில் ஏற்படும் வீணான குழப்பத்திற்கு அடிமையாகி விடாதீர்கள். கண் தொடர்பான பிரச்சனைகளில் அலட்சியம் வேண்டாம். சிறிய பிரச்சனை என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும். சிலருக்கு காது மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் அவதி ஏற்படலாம். புதியதாக உணவு வகைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம்.

பரிகாரம்: புதன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீலலிதா திரிசதி பாராயணம் செய்யவும்.

4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus