வரும் ஏப்ரல் 9 - ஆம் தேதி மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ரெஜிஷா விஜயன்.
பத்மப்ரியா, வித்யா பாலன் ஆகிய இரண்டு பிரபல கதாநாயகிகளின் கலவையான தோற்றத்தில் ஈர்க்கும் இவர்,சன் டிவியின் மலையாள சேனல்களான சூர்யா டிவி, சூர்யா மியூசிக் இரண்டிலும் தொகுப்பாளினியாக புகழ்பெற்று பின்னர் மலையாள சினிமாவில் அறிமுகமானவர். மலையாளத்தில் 10 படங்களைக் கடந்துவிட்டார்.
‘கர்ணன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க மாரி செல்வராஜ் அழைத்த போது, வீல் சேரில் வந்து அவரைச் சந்தித்திருக்கிறார். என்ன நடந்தது என அவரிடம் கேட்டபோது மனம் திறந்தார்: “மலையாளத்தில் ‘ஃபைனல்ஸ்’ என்றொரு ஸ்போர்ட்ஸ் டிராமா படம். அதில் சைக்கிளிஸ்ட்டாக நடித்தேன். அருண்.பி.ஆர். இயக்கிய படம். ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்துப் பெண், ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள கடும் பயிற்சியில் ஈடுபடுகிறாள்.
எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி அவளது கனவு கலைந்துபோகிறது. அதிலிருந்து அவள் மேலே எழுந்துவர அவளுடைய அப்பா எப்படி உதவுகிறார் என்பது படம். தற்போது எல்லோராலும் கொண்டாடப்படும் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தில் நடித்திருக்கும் சுராஜ் வென்ஜரமூடு தான் எனக்கு அப்பாவாக நடித்தார். அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை எடுத்தபோது, கதையில் நாயகி கதாபாத்திரத்துக்கு ஏற்படுவது போலவே, சைக்கிள் ஓட்டும்போது நானும் விபத்தைச் சந்தித்தேன். காலில் அடி. அதற்கான தொடர் சிகிச்சைக்காக மும்பைக்குச் சென்றிருந்தேன்.
அங்கே இருந்தபோதுதான், தயாரிப்பாளர் தாணுவின் வி.கிரியேஷன் மேனேஜர் என்னை தொலைபேசியில் அழைத்து இயக்குநரைப் பார்க்க வரமுடியுமா என்று கேட்டார். மும்பையிலிருந்து திரும்பும் வழியில் அவரைச் சந்திக்கத் தயாரிப்பாளர் அலுவலகத்துக்குப் போனேன். நான் வீல் சேரில் வருவதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஆடிப்போய் விட்டார்கள். மாரி செல்வராஜ், ‘கதாபாத்திரத்துக்காக காலையே உடைத்துக் கொள்வீர்களா.. வாங்க...வாங்க.. உங்களை மாதிரி ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்’என்று கூறி வரவேற்றார்” எனும் ரெஜிஷா அதற்கும் முன்பாக இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க இருந்தார்.
அந்தப் படம் பற்றி அவரிடம் கெட்டதற்கு: “ பாலா சார் இயக்க இருந்ததும் ஒரு கிராமத்துக் கதைக்காகத்தான். மேக்கப் இல்லாமல் என்னை வைத்து ஆடிசன் செய்தார். பிறகு கூப்பிடுகிறேன் என்றார். ஆனால் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது என்பதை பாலா சாரின் உதவியாளர்கள் வழியாக தெரிந்துகொண்டேன். அப்போது அவர்கள் ‘நல்ல வேலை மேடம் அடி வாங்குவதிலிருந்து தப்பித்தீர்கள் என்று சொன்னார்கள்” என்று சொல்லி சிரிக்கிறார் ரெஜிஷா விஜயன்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்