திரைப்படம் ஒரு கூட்டுக் கலை. பல கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களின் கூட்டுழைப்பில் உருவாகும் ஒன்று. என்றாலும் திரைமொழியின் மையமாக இருக்கக் கூடிய காட்சிமொழியின் பொருட்டு, ஒரு வெகுஜன திரைப்படத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை அப்படத்தின் இயக்குநர் தனது புரிதல் மற்றும் கலையாளுமை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்குகிறார்.
இதனால் ஒவ்வொரு படமும் தனித்துவத்துடன் வெளிவந்து பார்வையாளர்களுக்கு தனித்த திரை அனுபவத்தைச் சாத்தியமாக்குகிறது. ஆனால், திரை விமர்சனம் என்ற பெயரில், ஒரு திரைப்படத்தில் சம்மந்தபடும் கலைகளின் அடிப்படை அறிவு கிஞ்சிற்றும் இல்லாமல், பொத்தாம் பொதுவாக, தரம் தாழ்ந்து விமர்சிப்பவர் ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். பல நேரங்களில் கொச்சையான வார்த்தைகளால் தனிமனிதத் தாக்குதலும் தொடுத்துவிடுவார். இவரது இந்த முறைகேடான விமர்சன பாணிக்காகவே பல்லாயிரம் பார்வையாளர்கள் இவற்றைப் பார்ப்பது அவர்களது மலிவான ரசனையை வெளிக்காட்டுகிறது.
இப்படிப்பட்ட சமூக ஊடகச் சூழலில்தான் 'பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்' என்று திரைத்துறை பிரபலங்கள் சிலரும் நடுநிலையான விமர்சனத்தை எதிர்பார்க்கும் தரமான பார்வையாளர்கள் பலரும் அவருக்கு எதிர்வினையாற்றி வந்தனர். அவர்களின் சவாலை எதிர்கொள்ளும் விதமாக 'ஆன்டி இண்டியன்' எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார் மாறன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர்.ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் 'ஆன்டி இண்டியன்' படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர்.
அடிப்படையிலேயே சர்ச்சையான கதைக்களம் கொண்ட படங்களுக்கு இப்படி நிகழ்வது வழக்கம். சமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருக்கிறார்கள். இத்தடை குறித்து தயாரிப்பாளர் 'மூன் பிக்சர்ஸ்' ஆதம் பாவா கூறுகையில் 'சென்சார் குழுவினர் அவர்களின் முடிவை சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி 'ஆன்டி இண்டியன்' படம் திரைக்கு வரும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-4தமிழ்மீடியாவுக்காக:மாதுமை
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்