ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பெரும் அநீதியிழைக்கப்பட்டு வருகின்றது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் அமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு எனது மனச் சாட்சி இடம்தரவில்லை. இவ்வாறு முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ள மயோன் முஸ்தபாவுக்கு அவரது சொந்த ஊரான சாய்ந்தமருதுவில் அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு ஜனாதிபதி வேட்பாளர் மயோன் முஸ்தபா மேலும் கூறியதாவது, காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வருகின்ற சிங்களப் பேரின அரசுகள் தமிழ், முஸ்லிம் சகத்தினருக்கு சகல துறைகளிலும் அநீதியிழைத்தே வருகின்றன.
இஸட்ஸ்கோர் முறைமையினால் பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை மாணவர்களின் எண்ணிக்கை திட்டமிட்டுக் குறைப்புச் செய்யப்படுகிறது.
தென் பகுதி மற்றும் கொழும்பு தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. வளங்கள் போதியளவு வழங்கப்படுவதில்லை. ஆசி,யர் தட்டுப்பாடு நிலவுகிறது. இவற்றின் காரணமாக அப்பகுதி தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கல்வி பெரும் பின்னடைவு கண்டு வருகின்றது. குறிப்பாக முஸ்லிம்களின் கல்வி கேள்விக் குறியாக மாறி வருகின்றது.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்குவதற்கும் திட்டமிட்ட சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில் வாய்ப்பு, பதவி உயர்வு போன்றவற்றில் இன விகிதாசாரம் கடைப்பிடிக்கப்படாமல் சிறுபான்மையினர் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கு அரச அதிபர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளாக சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற சிங்களப் பேரினவாத அரசுகள் முன் வருவதாக இல்லை.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதி நிலவுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இதன் மூலம் வடக்கு முஸ்லிம்கள் தமது பூர்வீக இடங்களில் மீள்குடியேறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதேபோன்று கிழக்கில் முஸ்லிம்களுக்கு இருந்து வந்த ஆயுத ரீதியான அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. ஓர் அச்சமற்ற சூழல் தோன்றியுள்ளது. ஆனால் மறுபுறத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளைக் கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பொத்துவில் தொடக்கம் மூதூர், கிண்ணியா வரை கிழக்கில் நில ஆக்கிரமிப்பு தாண்டவமாடுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணி அபகரிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் அப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும் நான் பிரதியமைச்சராக இருந்து கொண்டு பல்வேறு மட்டங்களில் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தேன்.
ஆனால் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை. இதனால் நான் மட்டும் குழப்பக் காரனாகவே அரசினால் பார்க்கப்பட்டேன். அதன் காரணமாக எனது போராட்டங்கள் எவையும் வெற்றியளிக்கவில்லை.
ஆகையினால் இந்த அரசில் தொடர்ந்தும் பிரதியமைச்சராக பதவி வகித்துக்கொண்டு இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு எனது மனச் சாட்சி சற்றும் இடம்தரவில்லை.
அதேவேளை இத்தேர்தலை சிறுபான்மையினரின் பிரச்சினைகளையும் நாட்டுக்குத் தேவையான நல்ல வேலைத் திட்டங்களையும் முன்மொழிவதற்கான ஒரு பிரசார களமாகப் பயன்படுத்துவற்குத் தீர்மானித்தே நானும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
இதன் மூலம் எனது முன்மொழிவுகள் தொடர்பில் தேசிய சர்வதேச மட்டங்களில் கவனத்தை ஈர்க்க முடியும் என நம்புகின்றேன். இதற்காக எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளேன். தேர்தலில் எவர் வென்றாலும் அவற்றை அமுல் நடத்த வேண்டும் என்பதே எனது வலியுறுத்தலாகும்.
எனக்கு வாக்களிப்பதன் மூலம் மக்களும் இதற்கு அழுத்தம் கொடுக்க முடியும். எமது திட்டங்களை அமுல் நடத்துவதன் மூலம் நாட்டில் இன முரண்பாடுகள் களையப்பட்டு நிரந்தர சமாதானம், ஐக்கியம், சுபீட்சம் என்பன உயிர்பெறும் என்பதோடு பொருளாதார எழுச்சியும் சகல இன மக்களுக்கும் சமத்துவமான வாழ்வும் கிடைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
உங்கள் கருத்துக்கள்