முன்னொரு காலத்தில் அப்சலோம் என்ற பையன் இருந்தான். அவன் பெயருக்கு ஏற்ப, மிகவும் நல்ல குணங்கள் கொண்டவன். ஒரு முறை, நாட்டில் காலரா நோய் தாக்கியது. அதில் இவனது பெற்றோர் இறந்தனர். ஆதரவற்ற அப்சலோம் சிறிது தொலைவில் இருந்த கிராமத்தை அடைந்தான். அங்கிருந்த மக்கள், அவனை அன்போடு வரவேற்றனர்.
பசிக்குச் சோறு கொடுத்தனர். மிகவும் அக்கறையோடு அவனைப் பார்த்துக் கொண்டனர். மாடுகளை மேய்த்தும், கிடைத்த வேலைகளை செய்தும், அவன், சிறிது கூலி பெற்றான். அதைக்கொண்டு, பசியில்லாமல் இரண்டு வேளை உணவு உண்டு வந்தான். இந்த நிலையில், அவன் மனதில் இதுநாள் வரை இருந்த ஆசை ஒன்று, இப்போது தலை தூக்கியது. அது என்ன என்றால்... ஓவியம் வரையும் ஆசைதான். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆசை. சூழ்நிலையின் காரணமாகவும், பெற்றோரின் இறப்பினாலும், அதை செய்ய முடியாமல் தடை ஏற்பட்டது. இப்போது, வேலையும், வேளாவேளைக்கு உணவும், போதுமான ஓய்வும் கிடைத்ததும், அந்த ஆசை முளைவிட்டது. எனவே, அந்தக் கிராமத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தை அடைந்தான். அங்கு ஓர் ஆசிரியர், மாணவர்களுக்கு, ஓவியத்தில் பயிற்சி அளித்து வந்தார்.
""ஐயா, எனக்கு ஓவியம் தீட்டச் சொல்லித் தருவீர்களா?'' என்று பணிவோடு கேட்டான். ""மாடு மேய்க்கும் சிறுவனுக்கு, ஓவியம் ஒரு கேடா... போ... போ...'' என்று கேலி செய்தார் அவர்."சரி ஐயா... நீங்கள், ஓவியம் வரையக் கற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை; எனக்கு, ஏதேனும் ஒரு பழைய தூரிகை இருந்தால் கொடுங்கள்... அதை வைத்து நானே கற்றுக் கொள்கிறேன்,'' என்றான்.
இதைக் கேட்ட ஆசிரியர், மிகுந்த ஆத்திரம் அடைந்தார். ""அட பிச்சைக்கார நாயே! உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால், என்னிடம் ஒரு தூரிகை கேட்பாய்?'' என்று வாயில் வந்தபடி திட்டி, அவனை அங்கிருந்து விரட்டினார். இதனால், மனம் உடைந்துபோன அப்சலோம், யாருமில்லாத இடத்தில் மாடுகளை மேய அனுப்பிவிட்டு, மர நிழலில், மணல் பரப்பில் உட்கார்ந்து, ஓவியம் வரைய ஆரம்பித்தான். நாளடைவில் அவன், ஓவியம் வரையக் கற்றுக் கொண்டான். இது நாள் வரை, ஒரு மரக்குச்சியை அவன், தூரிகையாகப் பயன்படுத்தி வந்தான். எப்பாடுபட்டாவது, ஒரு தூரிகையை வாங்கிவிட அவன் ஆசைப்பட் டான். ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவனாகி விட்டான்.ஒரு நாள் மணல் பரப்பில், கோழிக் குஞ்சு ஒன்றை வரைந்தான். என்ன ஆச்சர்யம்! பருந்து ஒன்று, அந்தக் கோழிக் குஞ்சை உயிருள்ளது என்று நினைத்து, அதைத் தூக்கிச் செல்ல வட்டமிட்டது.
ஒருநாள் பவுர்ணமி இரவு நேரத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் அப்சலோம். அவன் கனவில் அழகிய தேவதை ஒன்று வந்தது. "அப்சலோம்... இந்தா நீ கேட்ட தூரிகை' என்று சொல்லி, ஒரு அழகான தூரிகையைக் கொடுத்தாள். அது, சாதாரணத் தூரிகை அல்ல... மந்திரத் தூரிகை. அப்சலோமால் இதை நம்பவே முடியவில்லை. "தேவதையே... மிக்க நன்றி' என்றான். சிரித்துக்கொண்டே மறைந்தாள் தேவதை. காலையில் கண் விழித்தபோது, அவன் கையில், நிஜமாகவே ஒரு தூரிகை இருந்தது. காலையில் அவன் மணல் பரப்புக்குச் சென்று, ஒரு அழகான பறவையை வரைந்தான். எழுதி முடித்ததுமே, சிறகுகளை அசைத்த வண்ணம் அது பறந்தோடிச் சென்றது. பின்னர், அவன் ஒரு மீனை வரைந்தான். அது துள்ளிச் சென்று, குளத்தில் விழுந்து நீந்தியது. அப்சலோம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மந்திரத் தூரிகை கொண்டு, கிராம மக்களுக்கு, எருமை, கலப்பை முதலிய உழவுப் பொருட்களை வரைந்து, உதவி செய்தான். இதனால், ஏழை, எளிய மக்கள், அவனைத் தெய்வமாகவே எண்ணி வழிபட்டனர்.
இது, அந்த ஊரில் இருந்த ஜமீன்தாருக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர், அவனைப் பிடித்து வந்து, தன் வீட்டில் சிறை வைத்தார். அவன் அங்கிருந்து தப்பி, அடுத்த ஊருக்குச் சென்றான். அங்கு, குறையுடைய ஓவியங்களைத் தீட்டினான். குறையுடைய ஓவியங்கள் உயிர் பெறவில்லை என்பதாலேயே அவன் அப்படிச் செய்தான். அவைகளை சொற்ப விலைக்கு விற்று வாழ்க்கை நடத்தினான். சிறிது காலம் சென்றது.
ஒருநாள், ஒரு கண் மட்டுமே உடைய ஒரு சிட்டுக் குருவியைத் தீட்டினான். ஆனால், மையை உதறும்போது, அது இன்னொரு கண் இருக்க வேண்டிய இடத்தில் சரியாகப் பட்டு விட்டது. அவ்வளவு தான், அந்த சிட்டுக் குருவி, உயிர் பெற்றுப் பறந்தோடியது. இதைப் பார்த்த ஊர் மக்கள், உடனே சென்று, இந்த அதிசயத்தை அரசனிடம் தெரிவித்தனர். அந்த அரசன் பேராசைக்காரன். பொன்னின் மீது ஆசை கொண்டவன். எந்தக் கொலைபாதகத்துக்கும் அஞ்சாமல், மக்களிடம் வரி வசூலிக்கும் கொடியவன். எனவே அவன், அப்சலோமை உடனே கைது செய்து, சிறையில் அடைத்து விட்டான். மந்திரத் தூரிகையையும் பறித்துக் கொண்டான்.
ஓவியர்களை வைத்து, கோட்டை, கொத்தளங்களையும், யானை, குதிரை போன்ற சதுரங்க சேனைகளையும் வரையச் செய்தான். அவை எல்லாம் உயிருடன் வந்துவிட்டால், யாராலும் தன்னை ஜெயிக்க முடியாது என்று நம்பியே, அவன் அந்த திட்டத்தில் ஈடுபட்டான். ஆனால் பாவம், அவன் எண் ணம் ஈடேறவில்லை. ஓவியங்கள் உயிர் பெறவில்லை. அரசன் மிகுந்த சினம் கொண்டான். அப்சலோம், தன்னை நன்றாக ஏமாற்றி விட்டான் என்று ஆத்திரம் அடைந்தான். அவன் தலையை வெட்டும்படி உத்தரவு இட்டான். மந்திரிகள், அவன் செயலைத் தடுத்தனர். சற்றுப் பொறுமையாக இருக்கும்படி வேண்டினர்.
""அரசே! இது மந்திரத் தூரிகை என்பதில் சந்தேகமே இல்லை... ஆனால், இது அந்த சிறுவனிடம் மட்டுமே, மந்திர சக்தியோடு செயல்படும் என்று நினைக்கிறோம். எனவே, அவனை அழைத்து, நகைகளும், பொன்னும், மணியும் தருவதாகக் கூறி ஆசை காட்டுங்கள். அவனையே இந்த ஓவியங்களை வரையச் சொல்லுங்கள். அப்போது இவை உயிர் பெறுவது உறுதி!'' என்று நம்பிக்கையூட்டினர்.
இதனால் மகிழ்ந்த மன்னன், அப்சலோமை சிறையில் இருந்து விடுவித்து, நல்ல ஆடை அணிமணிகள் தந்து உப சரித்து, தன் விருப்பத்தைத் தெரிவித்தான். மந்திரத் தூரிகையை, மீண்டும் எப்படியாவது திரும்பப் பெற விரும்பிய சிறுவன், மன்னன் ஆசைக்கு இணங்குவதைப் போல நடித்தான். மன்னன், மனம் மகிழ்ந்து, மந்திரத் தூரிகையை அவனிடம் கொடுத்தான். தனக்காக, பணம் காய்க்கும் மரம் ஒன்றை வரைந்து தருமாறு கேட்டான். சிறுவன் உடனே, நீல வண்ணக் கடலை வரைந்தான்.
""யார் உன்னைக் கடலை வரையும்படிக் கேட்டது? முட்டாளே நான் கேட்ட பணம் காய்க்கும் மரம் எங்கே?'' என்று கத்தினான் மன்னன். ""சற்றுப் பொறுங்கள் அரசே!'' என்று சொல்லிவிட்டு, கடலின் நடுவே தீவையும், அதன் நடுவே பணம் காய்க்கும் மரத்தையும் வரைந்தான். பிறகு, மன்னனிடம், ""அதோ நீங்கள் கேட்ட மரம்!'' என்று கூறினான். ""அங்கே எப்படி செல்வது? எனவே, ஒரு படகை வரைந்து கொடு!'' என்றான் மன்னன்.
உடனே அப்சலோம், மந்திரத் தூரிகையால், மிகப் பெரிய படகை வரைந்தான். அதில், மன்னனும், மந்திரிகளும், ராணியும் ஏறிக் கொண்டனர். உடனே, காற்றை வரைந்தான் அப்சலோம். படகு அசைந்து, அசைந்து மெதுவாகக் கடலில் செல்ல ஆரம்பித்தது. மன்னன், பெரு மகிழ்ச்சி அடைந்தான். ""படகு வேகமாக செல்லட்டும்!'' என்று ஆணையிட்டான். ""காற்று வேகமாக வீசட்டும்!'' என்று கத்தினான். இதைக் கேட்டதும், தன் மந்திரத் தூரிகையால், சூறாவளியை வரைந்து தள்ளினான். புயல் வீசியது... படகு, திசை மாறி, எங்கோ செல்ல ஆரம்பித்தது. மழையின் வேகம் அதிகரித்தது. படகுக்குள் நீர் புகுந்தது. ""போதும், போதும் நிறுத்து!'' என்று கத்தினான் மன்னன். ""இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது!'' என்று சொல்லிவிட்டான். புயலின் கடுங்கோபத்திற்கு ஆளான படகு கவிழ்ந்து, படகில் இருந்த அனைவரும், கடலில் மூழ்கி இறந்தனர். கொடுங்கோல் மன்னன் இறந்தான். மக்கள் அப்சலோமையே அரசனாக்கி மகிழ்ந்தனர். மந்திரத் தூரிகையின் உதவியால், ஊர் மக்களுக்குத் தேவையான பொருட்களை வரைந்து கொடுத்துக்கொண்டு நீண்ட காலம் இன்பமாக வாழ்ந்தான்.
உங்கள் கருத்துக்கள்
amjath,mj
0
கடவுல் அந்த அப்சலொமுக்கு கொடுத வரட்திர்க்காக நாம் கடவுலை முதலில் பிரார்தனை செய்ய வென்டும். அந்த சிருவனின் நல்ல குனதை நினைட்து நாமும் அவனை பொல வாழ முயர்ஷிக்க வென்டும்.
உங்கள் கருத்துக்கள்