counter create hit ஆக்ஸிஜன் மற்றும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி - மோடியை வறுத்தெடுக்கும் ஊடகங்கள் !

ஆக்ஸிஜன் மற்றும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி - மோடியை வறுத்தெடுக்கும் ஊடகங்கள் !

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

மேலும் மரபணு திரிபு ஏற்பட்டுள்ள புதுவகை கொரோனா தொற்றானது அறிகுறிகளே இல்லாமல் அது நுரையீரலை தாக்கி வருவதாக இந்திய மருத்துவ நிறுவனங்களின் அறிக்கைகள் எச்சரிக்கின்றன. இதனால் ஆக்சிஜன் கட்டுப்பாடில்லாமல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அவை கேட்டுக்கொண்டுள்ளன. ஆனால் 2021-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 9,300 மெட்ரிக் டன் பிராணவாயுவை ஏற்றுமதி செய்ய மோடி தலைமையிலான நடுவண் அரசு அனுமதி அளித்துவிட்டதாக முன்னணி ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதுவொருபுறம் இருக்க, கொரோனா தடுப்பூசி விஷயத்தில் இந்தியா கோட்டை விட்டுள்ளதையும் இந்திய ஊடகங்கள் எடுத்துக் காட்டி வருகின்றன. ஒரு புறம் ஆத்மநிர்பர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஆளும் பாஜக அரசு, கொரோனா தடுபூசிகள் மற்றும் அத்தியாவசியமான ஆக்ஸிஜன் வாயு ஆகியவற்றை கடந்த ஓராண்டில் கண்மூடித்தனமாக ஏற்றுமதி செய்து வந்துள்ளது, இந்தியாவுக்கு பெரிடியாக அமைந்துவிட்டதாக அவை தெரிவித்துள்ளன.

2021 முதல் காலாண்டில் இந்திய ஏற்றுமதி ஆணையம் அளித்துள்ள அதிகாரப் பூர்வ தகவல்களின்படி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 9,294 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 4502 மெட்ரிக் டன்கள்தான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆக்ஸிஜன் வாயு பற்றாக்குறையினால் கொரோனா நுரையீரல் பாதிப்பு மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பெரிய அளவில் இந்த ஆண்டு ஆக்ஸிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேவேளை, கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா கோட்டை விட்டது மட்டுமல்ல; நல்ல பேர் எடுக்கிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு.. இந்தியாவில் தயாரான கோரோனா தடுப்பூசியின் பாதிக்கும் அதிகமான அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதுடன் தானமும் செய்துள்ளது. இதுபற்றி தமிழகத்தின் முன்னணி இருவார இதழான ஜூனியர் விகடன் ஆதார பூர்வமாக தன்னுடைய 24.5.2021 இதழில் சுட்டிக்காட்டியிருக்கிறது. அக்கட்டுரையின் சிறு பகுதி இதோ:

நாம் தடுப்பூசியின் அவசியத்தை அலட்சியம் செய்தோம். ‘உலகின் பல நாடுகளுக்கும் தடுப்பூசி தானம் செய்யும் வல்லமை நமக்கு இருக்கிறது’ என்றார் பிரதமர். பல ஏழை நாடுகளுக்கு இலவசமாகவும், பணக்கார நாடுகளுக்கு விலைக்கும் தடுப்பூசிகளை அனுப்பினோம். ‘மோடியின் உதவியால் நாங்கள் கொரோனாவை வெல்கிறோம்’ என அந்த நாடுகளின் தலைவர்கள் நன்றி சொன்னார்கள். எல்லாமே பெருமிதமான தருணங்கள்தான்!

மார்ச் 24-ம் தேதி ஏற்றுமதியைத் தடை செய்யும் வரை நாம் சுமார் 6.4 கோடி டோஸ் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பினோம். ஆனால், இந்தியாவில் போடப்பட்டது 5.2 கோடி டோஸ்கள் மட்டுமே! அந்தத் தேதியில் இந்தியா முழுக்க 50 ஆயிரம் புதிய நோயாளிகள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

25 நாள்களுக்குள் இந்த எண்ணிக்கை இரண்டே முக்கால் லட்சமாக அதிகரித்துவிட்டது. இதன் உச்சம் எதுவரை போகும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இந்தியாவில் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பதாக அறிவிப்பு வெளியானதும், சீரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோடெக் மற்றும் ஃபைஸர் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்தனர். அப்போது அரசு ‘சுயசார்பு பாரதம்’ என்ற மனநிலையில் இருந்தது. அதனால், ஃபைஸர் நிறுவனத்தைக் கண்டுகொள்ளவில்லை. மற்ற இரு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த நவம்பரில் சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அந்த நேரத்தில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஏராளமாகத் தடுப்பூசி உற்பத்தி செய்துவிட்டு, அவற்றை வைப்பதற்கு இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. பிரதமர் எப்படியும் ஒப்பந்தம் போட்டு அவற்றை வாங்கிக் கொள்வார் என எதிர்பார்த்தது. அதேபோல, தங்கள் நிறுவனத்தின் கட்டமைப்பை விரிவாக்க 3,000 கோடி ரூபாய் நிதியுதவி கேட்டிருந்தது. அந்த நிறுவனம். அது கிடைத்தால், தங்களால் பல மடங்கு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றது. இரண்டையுமே பிரதமர் செய்யவில்லை. புகைப்படங்களுக்கு மட்டும் போஸ் கொடுத்துவிட்டு வந்தார்.

இப்போதுவரை நீண்டகால ஒப்பந்தம் எதுவும் போடாமல், அவ்வப்போது தேவைப்படும் தடுப்பூசிகளை மட்டுமே வாங்கிக்கொள்கிறது மத்திய அரசு. இதனால்தான் நம் அரசின் தேவையை உணர்ந்து அவர்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை. பிஎம் கேர்ஸ் நிதி இருக்கிறது; பட்ஜெட்டில் தடுப்பூசிக்காக 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும், அரசு இப்படித்தான் வாங்குகிறது என்று ஜுனியர் விகடனில் வெளியாகியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி சுட்டிக்காட்டியுள்ளது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.