“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. அதனால்தான். இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
வவுனியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தவறிவிட்டது. அதாவது அரசாங்கத்தின் முறையான திட்டமின்மை காரணமாகவே நாடு மோசமான நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் இலங்கைக்கு இலவசமாக வழங்கும் தடுப்பூசியினை மாத்திரமே அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. அதனைத்தான் வாங்கப்போகின்றோம் என்றும் கூறுகிறது.
அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடு, நாட்டு மக்களை பாதுக்காக்குமா என்பது கேள்விக்குறியே. அத்துடன் இதுவரையும் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீட்டை செய்யவில்லை.
இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.
வடக்கிற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். ஆனாலும் அவை போதுமானதாக இருக்காது. இந்த அரசாங்கத்துக்கு ஒட்டுமொத்த மக்களின் மீது அக்கறை கிடையாது.” என்றுள்ளார்.
Comments powered by CComment