புதுச்சேரியில் சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபிக்க இன்று கூடிய சிறப்புக் கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியைச் சந்தித்தது.
சபாநாயகர் சிவக்கொழுந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, நாராயணசாமி தனது கட்சியினருடன், சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினர்.
தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறியே அவர், பெரும்பான்மையை இழந்த நிலையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், " புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான். நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் உரிய தண்டனையை நிச்சயம் கொடுப்பார்கள்" எனக் குறிப்பிட்டார்.