நேபாளத்தில் ஆளும் கம்யூனிசக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி ஞாயிற்றுக்கிழமை அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
இது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நேபாள பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு பிரதமர் ஒலி பரிந்துரை செய்திருந்தார்.
இதனால் பாராளுமன்றத்தைக் கலைத்து அதிபர் உத்தரவிடவே, இது நேபாள கம்யூனிசக் கட்சிக்குள் கடும் பூசலை ஏற்படுத்தியது. இதற்குக் காரணமான பிரதமர் சர்மா ஒலியை கம்யூனிசக் கட்சித் துணைத் தலைவரான பிரசந்தா கடுமையாக சாடினார். மேலும் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சர்மா ஒலி நீக்கப் பட்டு ஞாயிறு நடைபெற்ற கம்யூனிசக் கட்சி நிலைக்குழு கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது.
கட்சியின் புதிய தலைவராக மாதவ் குமார் என்பவர் நியமிக்கப் பட்டார். பாராளுமன்றக் குழுத் தலைவராக பிரசந்தா தேர்வானார். பாராளுமன்றத்தைக் கலைத்தது ஏன் என்பது தொடர்பில் கம்யூனிசக் கட்சித் தலைமை விளக்கம் கேட்டிருந்த போதும் பிரதமர் சர்மா ஒலி தரப்பில் இன்னமும் விளக்கம் அளிக்கப் படவில்லை.
3 வருடங்களுக்கு முன்பு சீனாவால் மத்தியஸ்தம் வகிக்கப் பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேபாள கம்யூனிசக் கட்சி மாவோயிஸ்ட்டுக்களுடன் இணைந்திருந்தது. தற்போது இக்கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப் பட்டாலும், நேபாளக் காங்கிரஸின் ஆதரவுடன் சர்மா ஒலி தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்