free website hit counter

இது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்

நாம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வாள் முனையை விட பேனா முனை வலிமையானது. காலம் காலமாக இந்த பொன்மொழியைத்தான் நாம் கேட்டு வந்திருக்கின்றோம். ஆனால் தற்போதைய நவீன விஞ்ஞான உலகில் பேனா முனையை விட கம்யூட்டர் கீ போர்டு வலிமையானது என்று மாற்றிக் கொள்ள வேண்டும் போலுள்ளது. காரணம் இணையம்.

அதிலும் குறிப்பாக தமிழ் இணைய வெளி. ஒரு தமிழ் பத்திரிக்கை புலம் பெயர்ந்தவர்களிடம் போய்ச் சேர்ந்து கதை, கவிதை, கட்டுரை, செய்திகளை சொன்ன காலமெல்லாம் மலையேறி . இப்போது குறிப்பிட்ட நிகழ்வு நடந்த அடுத்த நொடியில் இணையவெளியின் மூலம் வந்து விடுகின்றது. இணையவெளி இன்று அச்சு ஊடக பத்திரிக்கைகளுக்கே சவாலாக உள்ளது. இந்த வகையில் 4 தமிழ் மீடியா எனக்கு ஒரு ஆச்சரியமான தகவல் களஞ்சியமே.

மிகச் சரியாக கடந்த ஏழெட்டு மாதங்களாகத்தான் தமிழ் மீடியாவின் ஒரு தீவிர வாசகனாக உள்ளேன். ஒரு தடவை இந்த தளத்தை மேய்ந்து கொண்டிருந்த போது மனமே வசப்படு என்று தமிழில் ஒரு (பழ)மொழியோடு இருந்த வாசகத்தைப் பார்த்து ரொம்பவே சொக்கிப் போனேன். காரணம் தமிழர்களுக்கு எப்போதும் எதுவும் கடல் கடந்து போய் திரும்பி வந்தால் தான் ரொம்பவே பிடிக்கும்.

என்னுடைய பார்வையில் உலகிலேயே மிகச் சிறந்த சிந்தனையாளர் திருவள்ளுவர். திருக்குறளில் சொல்லாதது எதுவுமேயில்லை என்பது என்பது என் தனிப்பட்ட எண்ணம். இந்த உலக சமூகத்திற்காக என்னன்ன தேவையோ அத்தனையும் அய்யன் திருவள்ளுவர் சொல்லியிருப்பதைப் போல எந்த மேற்குலக தத்துவ ஞானிகளும் சொல்லியிருப்பார்களா என்பதும் சந்தேகம் தான். நாம் தான் ஆங்கில எழுத்தாளர்களை கடன் வாங்கி ஜல்லியடித்துக் கொண்டிருக்கின்றோம். நான் திருக்குறளை நாம் விரும்பும் அளவுக்கு இந்த குழுமம் மூலம் வந்து கொண்டிருக்கும் மனமே வசப்படு கவர்வதாக உள்ளது.

மற்றொரு ஆச்சரியம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். சில காலங்களுக்கு முன் இவர்களின் பங்களிப்பு மூலம் தமிழ் இணையவெளியே தமிழால் தளும்பத் தொடங்கியது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக ஈழ உளவுத்துறை ஒவ்வொரு இடத்திலும் ஊடுருவியிருக்கும் சூழ்நிலையில் எவர் உண்மையான ஈழத்தமிழர் என்பதே சற்று பயத்துடன் பார்க்கவேண்டியுள்ளது. ஈழ ஆதரவு என்ற போர்வையில் அவரவர் வைத்துள்ள கொள்கையின்படி செய்திகள் திரிபுகளாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்று வரையிலும் 4 தமிழ் மீடியாவின் செய்திகள் திரிபுகளிற்றிருப்பது ஆச்சரியமான சமாச்சாரம்.

செய்தி என்பது வெறும் எழுத்துக்கள். படிப்பவர்களுக்குத்தான் அதன் நம்பகத்தன்மையை அவரவர் அனுபவங்கள் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் இருந்து வரும் இணையவெளி ஊடகத்திற்கும் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய இணைய ஊடகத்திற்கும் நிறையவே வித்யாசம் உண்டு. அதைத்தான் 4 தமிழ் மீடியா சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடிக்கு பக்கத்தில் உள்ள சிறிய கிராமத்தில் நடந்த செய்திகளையும் படித்துள்ளேன். அதேசமயத்தில் ஐரோப்பாவின் வேறொரு பகுதியில் நடந்த போராட்டதையும் படித்துள்ளேன். ஒரே சமயத்தில் ஒரு பதிவில் இரு வேறு பகுதிகளின் தகவல்களை வெளிக் கொண்டு வந்துகொண்டிருக்கும் இந்த குழுவினரின் ஒருங்கிணைப்பை பலமுறை எண்ணி வியந்துள்ளேன்.

செய்தி ஊடகங்களை வளர்த்தெடுக்க தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் திரைப்படச் செய்திகளை நம்பிதான் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு திரைப்படச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள உண்மைகளையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பலமுறை இவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட பத்திரிக்கைகள் தங்களின் கவர் ஸ்டோரியை எழுதுகின்றன என்பதை கவனித்தவர்களுக்குப் புரியும். ஈழம், சர்வதேசம், இந்தியா, தமிழ்நாட்டு அரசியல் என்று இந்த தமிழ் மீடியா என் பார்வையில் ஒரு பல்பொருள் அங்காடியாகவே உள்ளது.

பல சிறப்புகளைப் போலவே ஒரு பெரிய குறை இந்த தளத்தைப்பற்றி எனக்குள் உண்டு. இவர்கள் கொடுக்கும் எல்லா செய்திகளும் 200 வார்த்தைகளுக்கு அடங்குவதாகத்தான் இருக்கும். இன்னும் சில துணுக்குச் செய்திகள் போலவே இருக்கும். அதன் விரிவை நாம் வேறு தளங்களைப் பார்த்து தான் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் நான் தமிழ் மீடியாவில் படித்த ஒரு செய்தியின் அடிப்படையில் ஆச்சரியப்பட்ட விசயமும் உண்டு. பிரபாகரன் மரணம் குறித்த முரண்பட்ட தகவல்கள் பரவிக் கொண்டிருப்பதன் காரணத்தை ஒரு நீண்ட அலசலாக வெளியிட்டு இருந்தார்கள். தமிழ் ஊடகங்கள் எவராலும் சுட்டிக்காட்டப்படாத பல விசயங்களை இதன் மூலம் தான் உணர்ந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும், மின் அஞ்சல் வாயிலாக என்னைத் தேடி வந்து கொண்டிருக்கும் இந்த 4 தமிழ் மீடியாவின் செய்திகளும், கட்டுரைகளும், இணையவெளி ஊடகத்தில் ஒரு மகத்தான சாதனை தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் போன்றோர்களிடம் அத்தனை எளிதாக உரையாடி விடமுடியாது. ஆனால் தமிழ் மீடியாவில், ஒரு முறை எழுத்துப் பிழையுடன் வந்த செய்தியை உடனடியாக சுட்டிக் காட்டி மின் அஞ்சல் அனுப்பினேன். ஐந்து நிமிடங்களில் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் நடந்தது. அத்துடன அவர்களின் விளக்கமும் கிடைத்தது இதன் மற்றொரு ஆச்சரியம்.

வாசகர்கள் முக்கியம் அதை விட அவர்களுக்குண்டா மரியாதை முக்கியமாக கருதம் 4தமிழ் மீடியா, வாள் முனையை விட வலிமையானதாயினும், என் நேசத்துக்குரிய வலைமனை என்பதுதான் உண்மை. அதன் பின்னால் உள்ள அத்தனை உழைப்பாளிக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

- ஜோதிஜி
தேவியர் இல்லம். திருப்பூர்

No comments

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction