யாழ்ப்பாணத்துத் திருவிழா அலங்காரங்களில் முத்துச் சப்பரங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. யாழ்ப்பாணக் கோவில்களின் திருவிழாக்களில் பெரும்பாலும் எட்டாம் நாள் இரவு அல்லது தேர்த்திருவிழாவிற்கு முன்னைய நாள் இரவு சப்பை ரதத் திருவிழா எனும் சப்பரத்திருவிழா.
இந்தச் சப்பை ரதம் எனும் சப்பரம், முத்துச் சப்பரம், படல் சப்பரம், பூச்சப்பரம் எனப் பலவகைகள் உண்டு. பலகோவில்களும் தங்கள் வளர்ச்சியின் போக்கில், மிக உயர்ந்த படல் சப்பரம் கண்டிருந்தாலும், பல கோவில்களின் சப்பரத் திருவிழா முத்துச்சப்பரங்களுடன்தான் நடைபெற்றன. சப்பரத் திருவிழாக்கள் தவிர்ந்து சிறப்பான விழாக்களிலும் முத்துச் சப்பரங்கள் அமையும்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சிறப்புற்றிருக்கும், இந்த முத்துச் சப்பர அலங்காரம், பிற இடங்களில் அவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. ஒற்றைவாசல் முதல் மூன்று வாசல் துவாரங்கள் வரையுள்ள இந்த முத்துச்சப்பரங்களின் துவார விசாலத்திற்கேற்ப, அதனை உயர் கோபுர வடிவமாகக் கட்டமைப்பதில் யாழ்ப்பாணத்து அலங்காரக் கலைஞர்கள் மிகச் சிறந்தவர்கள். முத்துச் சப்பரங்களை வெறும் அலங்காரத் தோற்றமாக மட்டும் கொண்டாடி விட்டு விடமுடியாது. அந்தச் சப்பரங்களின் பின் அளப்பரிய மனித உழைப்பும், பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் சேர்ந்திருக்கிறது.
முத்துச் சப்பரங்களுக்கான அடிப்படை முத்துப்படல்கள். நெல்மணி போலவும், குண்டுமணி போலவும், இருக்கும் கண்ணாடி முத்துப்பரல்களை, அழகான வெல்வெட் நிறத்துணிகளின் பின்னணியில், சிறப்பான வடிவங்களில், தைத்துப் படல்களாக மாற்றுவதற்காக முழுக் கும்பமுமே உழைக்கும். இணுவில், அளவெட்டி, மல்லாகம், விளான் பகுதிகளில் உள்ள இந்தக் கலைக்குடும்பங்கள், பலரது கூட்டு உழைப்பில் உருவாகும் சப்பர அலங்கார முத்துப்படல்கள். இவ்வாறு உருவாகும் முத்துப்படல்கள், சப்பரங்களுக்கு மட்டுமன்றி, அன்னச் சோடனை, மயில் சோடனை, மற்றும் திருமண மணவறை, என்பற்றிலும், பயன்படுத்தப்படுவதற்கு, அவற்றின் அழகியலே முக்கியமானதாகும்.
காலமாற்றத்தில் இவ்வாறான கலைவடிவங்கள் அழிந்து வரும் நிலையிலும், புதிய அலங்கார வடிவங்கள் நாள் தோறும் தோன்றி வரும் நிலையிலும், முத்துச் சப்பரங்களின் அழகே தனி. யாழ்ப்பாணத்தில் இன்றளவும் முத்துச்சப்பரங்கள் உயர்ந்து எழுந்து, யாழ்ப்பாணத்தின் அலங்கார அடையாளமாக நிற்பது யாழ்ப்பாணத்துக்கான கலாச்சாரச் சிறப்புக்களில் ஒன்று.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்