free website hit counter

ரூ.1,000 உரிமைத் தொகைக்கு முதல்வர் படத்துடன் விண்ணப்பம் விநியோகம் - அரசுத் தரப்பில் மறுப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை தொடர்பாக இணையத்தில் விண்ணப்பம் ஒன்று வைரலாகி வருகிறது.
குடும்பத் தலைவிகள் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என முதல்வர் ஸ்டாலின் படத்துடன் விண்ணப்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்படுவது, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவ்வாறு விண்ணப்பம் எதுவும் வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும்தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி இதுவரை குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தற்போது தீவிரமாக நடந்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, அதில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிக்கான உரிமைத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றன.திமுக வேட்பாளர்களுடன் செல்லும் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் அப்பகுதி பெண்கள் இதுபற்றி கேட்பதால், அவர்கள் பிரச்சாரத்துக்கு செல்வதை தவிர்ப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த சூழலில், 13-ம் தேதி திண்டுக்கல் பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசியமுதல்வர் ஸ்டாலின், ‘‘பெண்களுக்கு உரிமைத் தொகையாகமாதம் ரூ.1,000 வழங்கப்போகிறோம். யாரையும் ஏமாற்ற மாட்டோம்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

அதில், தமிழக அரசின் ஏழைகுடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகைக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடை எண், குடும்பத் தலைவி பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குடும்பஅட்டை வகை, குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவரா? ஆம் எனில் பிபிஎல் பட்டியல் எண் ஆகியவை கோரப்பட்டுள்ளது.

அதன் கீழ், குடும்ப அட்டைதாரர் விவரம் குறிப்பிடப்பட்டு, ரூ.1,000 பெற தகுதி பெறுகிறாரா, இல்லையா என்று, விண்ணப்பத்தை சரிபார்த்து சான்றளிப்பவர் கையொப்பமிடும் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் விண்ணப்பங்கள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் கேட்டபோது, அவ்வாறு எந்த விதமான விண்ணப்பமும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction