பழம்பெரும் கதாசிரியர், இயக்குநர், ஸ்ரீதரின் நண்பரான சித்ராலயா கோபுவின் எழுத்து இயக்கத்தில் 1972-ல் வெளியான முழு நீள நகைச்சுவைப் படம் ‘காசேதான் கடவுளடா’ இந்தப் படத்தில் முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
படம் சக்கைப்போடு போட்டது. தற்போது அந்தப் படத்தை இயக்குநர் ஆர். கண்ணன் அதிகாரப்பூர்வ ரீமேக் உரிமையை வாங்கி, தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அவரது காதலியாக பிரியா ஆனந்த் அவர்களும் நடிக்கிறார்கள். இதில் மிக மிக முக்கியமாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஊர்வசி கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.இயக்குநர் கண்ணன் கூறும்போது:
“மிகுந்த உற்சாகத்துடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்பை துவக்கியுள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். நீண்ட கோவிட் பொதுமுடக்க காலத்திற்கு பிறகு தொழில் நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் ஒன்றாக பணியில் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இன்னொரு புறம் தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடி படமாக, மக்களின் மனதில் என்னென்றும் நிற்கும் “காசே தான் கடவுளடா” படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்ய வேண்டிய கடமையுணர்வு உள்ளது. தங்களது அற்புத நடிப்பு திறமை மற்றும் நகைச்சுவை உணர்ச்சியால் மக்களை மகிழ்விக்கும் நடிகர் குழு இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த அட்டகாசமான நடிகர் குழுவுடன், திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவும் இணைந்து இப்படத்தினை மிகச்சிறந்த படைப்பாக தருவோம் எனும் முழு நம்பிக்கை உள்ளது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்பாக, தியேட்டரில் சிரிப்பு மழை பொழியும் படைப்பாக, இப்படம் இருக்கும்” என்றார். ஆனால், சிறந்த கிளாசிக் படமான ‘காசேதான் கடவுளடா’ படத்தை செல்லாக் காசாக மாற்றிவிடாதீர்கள் என்று மூத்த ரசிகர்கள் தமிழ்நாட்டில் குமுறியிருக்கிறார்கள்