free website hit counter

தீபாவளி 2021: எந்தந்த மாநிலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி?

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வருகின்ற நவம்பர் 4ஆம் திகதி, வியாழக்கிழமை இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு, மாசு இல்லாத பண்டிகைக் காலத்துக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல மாநிலங்கள் பசுமை பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் வெடிப்பதற்கும் அனுமதித்துள்ளன, அவை சுற்றுச்சூழலுக்கு பாதகம் இல்லாத பட்டாசுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும் அவை வெடிக்கும் போது தூசியை அதிகம் வெளியிடாமல் உதவுகின்றன.

இந்த தீபாவளியில் எந்தெந்த மாநிலங்களில் பட்டாசுகள் வெடிப்பது குறித்த உத்தரவுகளின் பட்டியல்

டெல்லி

டெல்லியில் ஜனவரி 1, 2022 வரை பட்டாசுகளை வெடிக்கவோ, விற்பனை செய்யவோ முற்றிலும் தடை விதித்து டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா

ஹரியானா அரசு தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) அதன் 14 மாவட்டங்களில் அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. மேலும் பிற பகுதிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, பிவானி, சர்க்கி தாத்ரி, ஃபரிதாபாத், குருகிராம், ஜஜ்ஜார், ஜிந்த், கர்னால், மஹேந்தர்கர், நுஹ், பல்வால், பானிபட், ரேவாரி, ரோஹ்தக் மற்றும் சோனிபட் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புறக் காற்றின் தரம் 'மிதமான' அல்லது சிறப்பாக இருக்கும் பகுதிகளில், பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்படும் என (குறிப்பிட்ட திறந்த இடங்களில் மட்டும்) அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு கூட, பசுமை பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பட்டாசு விற்பனை உரிமம் பெற்ற வணிகர்கள் மூலமே விற்பனை செய்யப்படும்.

இதேவேளை , பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் நகரங்களின் பட்டியலையும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடகா

கர்நாடக அரசு தீபாவளியின் போது பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்கவும் வெடிக்கவும் அனுமதித்துள்ளது மற்றும் கோவிட் -19 விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பச்சை பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர, வேறு எந்த பட்டாசுகளையும் விற்கவோ வெடிக்கவோ கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அதிகாரிகளிடம் தேவையான அனுமதி பெற்ற விற்பனையாளர்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்க முடியும். நவம்பர் 1 முதல் 10 வரை மட்டுமே பச்சை பட்டாசு விற்பனைக் கடைகள் திறக்கப்படும்.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (WBPCB) முன்னதாக தீபாவளி மற்றும் காளி பூஜை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரம் பச்சை பட்டாசுகளை வெடிக்க அனுமதித்துள்ளது குறிப்பிட்ட பூஜையின் போது காலை 6 மணி முதல் 8 மணி வரை இரண்டு மணி நேரமும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று 35 நிமிடங்களும் பச்சை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படும் என்று வாரியத்தின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வெள்ளிக்கிழமை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்த ஆண்டு காளி பூஜை, தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் பிற பண்டிகைகளின் போது அனைத்து பட்டாசுகளை விற்கவும், வாங்கவும் மற்றும் பயன்படுத்தவும் தடை விதித்தது.

இந்த உத்தரவு, தீபாவளி மற்றும் காளி பூஜையின் போது குறிப்பிட்ட காலத்திற்கு "பச்சை" பட்டாசுகளை பயன்படுத்த அனுமதித்த மேற்கு வங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்கிறது.

புதுச்சேரி

தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் பட்டாசு விற்பனைக்கு யூனியன் பிரதேசத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான பாப்ஸ்கோ, யூனியன் பிரதேசம் முழுவதும் பட்டாசுகளை மானிய விலையில் விற்பனை செய்ய கடைகளை அமைத்துள்ளது. இந்நிறுவனம் பொதுமக்களுக்கு 75 சதவீத மானியத்தில் பட்டாசுகளை வழங்கி வருகிறது.

ராஜஸ்தான்

இந்த தீபாவளிக்கு பச்சை பட்டாசுகளை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் ராஜஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வரும் பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்தையும் அரசு வெளியிட்டுள்ளது.

அரசின் திருத்தப்பட்ட அறிவிப்பின்படி, தீபாவளி மற்றும் குருபரப் போன்ற பண்டிகைகளில் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், சத் பூஜையில் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 முதல் 12:30 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம்.

"மோசமான" மண்டலத்தில் அல்லது அதற்குக் கீழே காற்றுத் தரக் குறியீடு (AQI) உள்ள இடங்களில் பட்டாசுகளைப் பயன்படுத்துவது தொடர்ந்து தடைசெய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Source : Hindustan Times

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction