free website hit counter

ஆவணிச் சதுர்த்தியும் ஆனைமுக அவதாரமும்

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முழுமுதற் கடவுளாம் மூலபரம்பொருளாம் விநாயகரை விரதம் அனுஸ்டித்து வழிபடும் நாள் ஆவணிச்சதுர்த்தியாகும். தேவர்கள் இடர் தீர்த்து எல்லர உயிர்களையும் விக்கினமின்றி காப்பவர் விக்கினேஸ்வரராவர்.

எக்காரியமும் இடையூறு இன்றி தடங்கல் இல்லாது நிறைவேற்றுபவர் ஆனைமுகன் அவரை வணங்காது செய்யப்படும் எக்காரியமும் தடைப்படும் என்பது வழக்காகும். மூன்று முறை தலையில் குட்டி காதுகளை கைகளால் மாறி ப்பிடித்து தோப்புக் கரணம் போட்டு அவரை வணங்கினால் அருள் தருவார். அவர் ஆனைமுகமும் ஜந்து கரமும் உடையவர். அவர் காதுகள் பெரிதாக அமையப் பெற்றவரும், வயிறு பெரிதாக விளங்கியவருமாக எலியை வாகனமாக்கி அதில் வீற்றிருப்பார்.

அப்படிப்பட்ட விநாயகர் அறிவுக்கு அதி தேவதையாகவும், செல்வத்தை வழங்குவபவருமாக அதி சக்தி வாய்ந்த தெய்வம் என போற்றி வழிபடுகின்றனர். பலசித்திகளை வாரி வழங்கும் விக்கினர் ஒருகையில் பூரணமாகிய இனிமை நிறைந்த மோதகத்தையும், ஒருகையில் பிறைச் சந்திரன் போன்று தந்தத்தையும், இன்னொருகையில் தாய் தந்தையை அதாவது பார்வதி பரமேஸ்வரரை பூஜிக்க என இரத்தினக்கலசத்தையும், இன்னொருகையில் பாசமும் மறு கையில் அங்குசமும் கொண்டு விளங்குகிறார்.

ஶ்ரீ கச்சியப்ப முனிவர் விநாயகரின் திருவுருவ விளக்கத்தைப் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.


"பண்ணிய மேத்துங் கரத்தனக் காக்கிப் பானிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க் காக்கி யாதனக் கலச வியன்கரத் தந்தை தாய்க் காக்கிக்
கண்ணிலா ணவவெங்கரிபிணித்தடக்கிக் கரிசினேற்கிருபையு மாக்கு
மண்ணலைந் தணிகை வரைவளராபக் காயனை யகந்தழீ இக் களிப்பாம்"

அடியேனை ஆணவம் என்கின்ற யானை துன்புறுத்துகிறது. அதைக் கயிற்றினால் கட்டி அங்குசத்தால் குத்தி என்னைத் துன்புறுத்தாமல் அடக்கியாள்கின்றார். தமக்கு ஒரு கையும், தேவர்களை துன்புறுத்தி வந்த கஜமுகாசுரனை சம்ஹரிக்கும் பொருட்டு தேவர்களுக்குதவியாக ஒரு கையும் மாதா பிதாவுக்காக ஒருகையும், உபயோகமற்ற அடியேனைக் காத்தற்பொருட்டு இரண்டு கையும் கொண்டருளும் ஶ்ரீ விநாயக பெருமான் வேண்டியவர்க்கு வேண்டியதைத் தர வல்லவர்.

அவரருளில்லாது எமக்கு விமோசனம் கிடையாது. பரப்பிரம்மம் என அழைக்கப்ப்டும் விநாயகர் இனமத மொழிக்கு அப்பாற் பட்டு அனவரினாலும் பூஜிக்கத் தக்கவராக திகழ்ந்தவர். ஆவணிச் ச்துர்த்தி நாளினில் அவதரித்து வேழமுகத்தோன், கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்தார். ஒருமுறை சந்திரன் தன்பெற்ற சாபத்தாலே ஒளி இழந்தான். அதைக்கண்ட விநாயகர் தமது நெற்றியில் திலகமாக அணிந்து சந்திரனுக்கு ஒளிகொடுத்து கஸ்டம் நீக்கினார். இதனால் பாலச்சந்திரன் எனும் பெயர் பெற்றார்.

இன்னொரு சமயம் அக்கினிக்கு ஏற்பட்ட சாபத்தைபோக்க தமது காதுகள் இரண்டையுமே முறங்களாக்கி விட்டு அதன் வெப்பம் தணியாது காப்பாற்றினார். அதனால் சூர்ப்பகர்ணர் எனப் பெயர் பெற்றார். பரசுராமர் விநாயகரை லட்சியம் செய்யாது சிவனை வழிபடச்செல்கையில் தடுத்து நிறுத்திய விநாயகருடன் போர் புரிந்து பரசுவை விட்டெறிய விநாயகரின் தந்தம் முறிந்தது. அதனாலே ஏகதந்தர் என்ற பெயர் வழங்கலாயிற்று.

தந்தம் உடைந்ததற்கு வேறு ஒரு கதையும் உண்டு மகாபாரதக்கதையை வியாசர் சொல்லச் சொல்ல மேரு மலையில் தனது தந்தத்தை ஒடித்து முதலில் தமிழால் எழுதியவர் விநாயகரே என்று புராணங்கள் கூறுகின்றன.

தேவர்களை வெப்பத்தினால் தகித்த அனலாசூரனை விழுங்கி, கஜானன் அனைவரையும் காத்து ரட்சித்தார். அவரது உடல் உஷ்ணத்தை தகிக்க அறுகம்புல் கொண்டு முனிவர்கள் வணக குளிர்ச்சி அடைந்து உலக மக்களை காத்தார். நாமும் இந்த ஆவணி சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்கி வழிபடுவோமாக.

- 4தமிழ்மீடியாவுக்காக அருந்தா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction