free website hit counter

ஆசிய கோப்பை : சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுப்போட்டிக்கு முன்னேறி விட்டன.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் இறுதி போட்டிக்கு முன்னேறிய இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசம் 30 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ரிஸ்வான் 14 ரன்னுடன் வெளியேறினார். பகார் ஜமான், இப்திகர் அகமது, தலா 13 ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். முகமது நவாஸ் 26 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட்டானார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்களையும், தீக்சனா மற்றும் மதுஷன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். இலங்கை அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரின் 2-வது பந்தில் குசல் மெண்டிஸ் டக் அவுட்டாகி வெளியேற அவரை தொடர்ந்து களமிறங்கிய தனுஷ்கா குணதிலகா 2-வது ஓவரில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் இளம் வீரர் பத்தும் நிசாங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இலங்கை அணி 80 ரன்கள் எடுத்திருந்த போது பனுகா ராஜபக்சா 24 ரன்களில் உஸ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் ஷனகா களமிறங்கினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிசாங்கா அரைசதம் கடந்து அசத்தினார். இலங்கை அணி வெற்றியை நெருங்கும் நேரத்தில் கேப்டன் ஷனகா 16 பந்துகளில் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் பதும் நிசாங்காவுடன் ஹசரங்கா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி பாதை நோக்கி அழைத்து சென்றது. இறுதியில் இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்த 124 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 48 பந்துகளில் 55 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்கா தெரிவானார்.

நாளை மறுநாள் நடைபெறும் இறுதி போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction