விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இரண்டாம் தவணையை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை இன்னும் கடினமான பயணத்தை எதிர்நோக்கியுள்ளது என வலியுறுத்தினார்.
"நாங்கள் ஒரு தொங்கு பாலத்தின் ஊடாக பயணித்துள்ளோம். இந்தப் பாலத்தின் ஊடாக எமது பயணத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை." என்று கூறிய அவர், IMF உடன் இணைந்து பணியாற்றுவதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை என்பதை வலியுறுத்தினார்.
“கடன்களை மறுசீரமைப்பதற்காக எங்களின் பெரும்பாலான கடனாளிகளுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டோம். எவ்வாறாயினும், முக்கியமாக பத்திரம் வைத்திருப்பவர்களான எங்கள் தனியார் கடனாளிகளுடன் ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்கான பணியை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” என்று அவர் மேலும் கூறினார்.
“எவ்வாறாயினும், இரண்டாவது தவணையைப் பாதுகாப்பதன் மூலம் இலங்கை ஒரு திவாலான நாடு என்ற முத்திரையைக் கழற்ற உள்ளது. நாம் திவால் என்று அறிவித்ததன் பின்னர் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு உதவிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்." என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.