எமது சூரியன் ஆனது ஒரு செக்கனுக்கு 4.3 மில்லியன் மெட்ரிக் டன் அளவு சக்தியை ஒளியாக வெளியிட்டு வருகின்றது.
இது சுமார் 6 டிரில்லியன் ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்குச் சமனாகும். அப்படியெனில் எமது சூரியன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகப்பெரும் திணிவை சக்தியாக மாற்றம் செய்து விடும் போது அதன் ஈர்ப்புச் சக்தியில் குறைவு ஏற்பட்டு கோள்களின் இயக்கம் பாதிக்குமா? இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் போன்ற கேள்விகள் எழுவது சாத்தியமே!
இதற்கான வானியலாளர்களின் விளக்கத்தைப் பார்ப்போம். இந்த ஒரு செக்கனில் சூரியன் வெளியிடும் ஒளிச்சக்தி அதன் மொத்தத் திணிவுடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை எனப்படுகின்றது. அதாவது சூரியனின் நிறை 2 ஆக்டில்லியன் மெட்ரிக் டன் (2 இற்குப் பின் 27 பூச்சியங்கள்) ஆகும். இதே ஒரு செக்கன் மாறுபடா வீதத்தில் சூரியன் ஒளியையும், வெப்பத்தையும் வெளியிட்டு வந்தால் கூட அது தனது 1% வீத திணிவை இழக்க இன்றைய பிரபஞ்ச வயதின் 10 மடங்கு காலம் எடுக்குமாம். எனவே சூரியனின் ஈர்ப்பு எமது பூமிக்கும், கோள்களுக்கும் இன்னும் பல பில்லியன் வருடங்களுக்கு மாறுபடாது தான் இருக்கும்.
Solar Wind எனப்படும் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் சூரிய சூறாவளி கூட ஒரு செக்கனுக்கு 1.5 மில்லியன் மெட்ரிக் டன் சக்தியை கதிர்வீச்சாக இழந்து வருகின்றதாம். ஆனால் சூரியனின் ஆயுள் காலத்துடன் ஒப்பிடுகையில் இந்தத் திணிவு இழப்புக் கூட மொத்தத் திணிவின் 0.1% வீதத் திணிவை விடக் குறைவாகும்.
ஆனால் சூரியனின் கடைசி ஆயுள் சுழற்சியில் இந்தத் திணிவு இழப்பு வீதம் அதிகரிக்கச் (ஆர்முடுகல்-Acceleration) செய்யுமாம். சூரியன் அதிகளவு ஹைட்ரஜன்களைக் கருத்தாக்கம் செய்யும் போது அது இப்போது இருக்கும் அளவை விடப் பெரிதாகி மேலும் அதிகளவு வெப்பத்தையும், ஒளியையும் வெளியிடச் செய்யுமாம். இந்தக் கருவினை முடிந்து சூரியன் மெது மெதுவாக ஒரு வெள்ளைக் குள்ளனாக (White Dwarf) ஆக மாற முன் அது தன் வெளிப்புறத்தின் பல முக்கிய அடுக்குகளை இழந்து விடும் என்பதுடன் அதற்கு முன்பே சூரியனுக்கு அருகேயுள்ள புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் போன்ற கோள்கள் சூரியனின் மேற்பரப்புக்குள் ஈர்க்கப் பட்டு அழிந்து விடுமாம்.
ஆனால் இவ்வாறான ஒரு சூழல் ஏற்படவும் இன்றிலிருந்து இன்னும் பல பில்லியன் வருடங்கள் இருப்பதாகவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்