வானில் தோன்றும் ஒரு அரிய நிகழ்வாக, பெப்ரவரி 28, 2026 அன்று, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு புதன், வெள்ளி, நெப்டியூன், சனி, யுரேனஸ் மற்றும் வியாழன் ஆகிய ஆறு கிரகங்கள் வானத்தில் அணிவகுக்கவுள்ளன.
இந்த வானியல் நிகழ்வை 2026 இன் மிக முக்கியமான ஒரு "கிரக அணிவகுப்பு" என சில வாரங்களுக்கு முன்பு நாசா அறிவித்திருந்தது.
வானிலை சீராக அமைந்தால் பெப்ரவரி 28ந் திகதி சனிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின் அடிவானத்தில் தோன்றும் ஆறு கிரகங்களில், புதன், வியாழன், வெள்ளி, சனி, நான்கு கிரகங்களை நாம் நேரடியாகக் காண முடியும் என்றும், யுரேனஸ் மற்றும் நெப்டியூனைத் தொலைக்காட்டியின் உதவியுடன் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதனைக் கண்டறிவதும் கடினமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
2026, பிப்ரவரி 28, சனிக்கிழமை, எனக் குறிக்கப்பட்ட திகதி ஒரு இடைநிலை திகதியாகும். சிலவேளை இந்த நிகழ்வு சில நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது பின்னர் நிகழக்கூடும். இது நாம் பூமியிலிருந்து கண்காணிக்கும் இருப்பிடத்தைப் பொறுத்து சாத்தியமாகும்.
இந்தக் கிரக அணிவகுப்பு ஒரு அரிய நிகழ்வா?
கோள்கள் அணிவகுப்பு ஒரு அரிய நிகழ்வல்ல. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை அதனை அரிய நிகழ்வாக மாற்றியமைக்கின்றன. பிப்ரவரி 28, 2026 சனிக்கிழமை திட்டமிடப்பட்ட நிகழ்வை சிறப்பானதாக்குவது என்னவென்றால், வெற்றுக் கண்ணுக்குத் தெரியும் கோள்களின் எண்ணிக்கை (ஆறில் குறைந்தது நான்கு) மற்றும் சூரிய அஸ்தமனத்தில் இந்த அணிவகுப்புத் தெரிவது என்பதனால், அவற்றைக் கவனிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகைய நிகழ்வின் முக்கியத்துவம் பூமியிலிருந்து கவனிக்கப்படும் பல்வேறு கோள்களுக்கு இடையிலான வெளிப்படையான தூரத்துடனும் தொடர்புபட்டுள்ளது.
