தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மேற்குவங்காளத்தில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு (29-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா? இல்லை அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழக தேர்தல் களத்தில் புதிதாக உதித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார்? என்பதும் மிகப் பெரிய அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
விஜய் பிரிக்கும் வாக்குகள் தி.மு.க. கூட்டணியை அதிகம் பாதிக்குமா? இல்லை அ.தி.மு.க. அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது போன்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களிலும், பொது மக்கள் மத்தியிலும் காரசாரமாக எழுந்துள்ளது. யூடியூப் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவர்கள் விஜய் பிரிக்கப் போகும் வாக்குகள் தமிழக அரசியல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அலசி வருகிறார்கள்.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடியடைந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன. நாளை இரவு தங்களது தொலைக்காட்சி சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு வெளியாக இருப்பதாக பல்வேறு ஆங்கில தொலைக்காட்சிகள் நேற்று முதல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.'
இதன் மூலம் இந்த கருத்துக்கணிப்புகள் "மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதுடன் அரசியல் களத்தில் பரபரப்பும் அதிகரித்து உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை விஜய் பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க.வை தான் பாதிக்கும் என்று தி.மு.க.வினரும், தி. மு.க.வைதான் பாதிக்கும் என்று அ.தி.மு.க.வினரும் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யும் சில தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இதன் காரணமாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த மாதிரி இருக்க போகிறது. என்பது இப்போதே பேசு பொருளாக மாறியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்குமா? இல்லை அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்பதும் கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்குமா? இல்லை காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? என்பதும் பரபரப்பான எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமை யில் மீண்டும் ஆட்சி அமையுமா? இல்லை பாஜக ஆட்சியை கைப்பற்றுமா? என்பதும் அசாம் மாநிலத்தில் பாஜ.க. ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது காங்கிரஸ் உன்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் நிலையில்தான் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நாளை வெளியாக இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
