நெல்லையில் 8ம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், தீய திராவிட மாடல் தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்டு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதோடு, தடுக்க வந்த ஆசிரியரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள், கத்தி போன்ற கொடூர ஆயுதங்களுடன் பள்ளிக்கு வரும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில் சட்டமும், சமூகமும் சீர்கெட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான புகார்களும், பள்ளி மாணவ, மாணவியர் மது அருந்தும் காணொளிகளும், மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல் செய்திகளும் வராத நாட்களே இல்லை என்ற அளவிற்கு மிக மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது என்றும் தனது அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம்-ஒழுங்கைக் கட்டி காக்க திறனற்ற தி.மு.க., ஆட்சியில் ஒட்டுமொத்த சமூகமும் குற்றச்சமூகமாகச் சீர்கெட்டு நிற்பதன் சமகாலச் சான்றுகளில் ஒன்றுதான் தற்போது பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் மற்றும் ஆசிரியர் மீது நடைபெற்றுள்ள கொலைவெறித் தாக்குதலாகும் எனவும்
திராவிட மாடல் ஆட்சியை அகற்றுவது ஒன்றே நாட்டில் நாள்தோறும் நடைபெறும் கொடுமைகள் அனைத்தையும் தடுப்பதற்கான சரியான தீர்வாகும் என்றும் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.