சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியினர், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன் நேற்றுமுன் தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எமது ஆட்சியைக் கவிழ்க்க எதிரணியினர் படாதபாடுபடுகின்றனர். அவர்கள், தமது ஆதரவாளர்களை பேருந்துகளில் ஏற்றிவந்து ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட வைத்துள்ளனர். இதனால் என்ன பயனை அவர்கள் அடைந்தார்கள்? எதிரணியினர், ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது. ஏனெனில், 69 இலட்சம் மக்களின் ஆணையுடனேயே இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதை எதிரணியினர் கவனத்தில்கொள்ள வேண்டும்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல. தற்போதைய எதிரணியினர் தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர். அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவிக்கின்றோம்.
இதை எமக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் மக்களும் புரிந்துகொள்வார்கள்.
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்படும். ஜனாதிபதி இதில் உறுதியாகவுள்ளார் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.