சுவிடிஸ் மனிதாபிமானச் செயற்பாட்டாளரும், இயற்கை ஆர்வலருமான, கிரேட்டா தன்பெர்க், காசாவிற்கான மனிதாபிமான உதவிப் பணிகளுக்கான ஒரு தொகுதிப் பொருட்களுடன், சென்ற மேட்லீன் கப்பல் இஸ்ரேலிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.
மனிதாபிமானக் கப்பல் கடத்தப்பட்டு இஸ்ரேலில் நிறுத்தப்பட்டதாகவும், அங்கிருந்து அதில் பயணித்தவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. பிரித்தானிக் கொடியுடைய மேட்லீன் படகினை வாடகைக்கு அமர்த்தி, அதில் மனிதாபிமான அடையாள உதவிப்பொருட்களுடன், ஃப்ரீடம் புளோட்டிலா அமைப்பின் 12 உறுப்பினர்களும் பயணித்தார்கள்.
இந்தக் குழுவில் மிகவும் பிரபலமானவர்களாக, சுவீடிஸ் காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் சிரியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் பிறந்து இப்போது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரீமா ஹாசன் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன், கப்பலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியின் வேறு சில முக்கிய உறுப்பினர்களும் உள்ளதாகத் தெரிய வருகிறது.இதேபோன்று 2009ல் வன்னிப் பெருநிலச் சமர்களத்துக்கு மனிதாபிமானப் பணிகளுடன் சென்ற 'வன்னிமண்' இந்தியப் பெருங்கடலில் பயணிக்கையில் இந்தியக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.