free website hit counter

தடுப்பூசி போடும் முன் 3 விதமான பரிசோதனைகள் தேவை !

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் யாரும், அதற்குமுன் மூன்றவிதமான பரிசோதனைகளை செய்துகொள்வது நலம் பயக்கும் என்று புதிய ஆலோசனையை கூறுகிறார் பதிவுபெற்ற சித்த மருத்துவர் வி. சண்முகம்.

அவரிடம் அந்தப் பரிசோதனைகள் பற்றிக் கேட்டபோது: “இக்கட்டான சூழ்நிலையில் தடுப்பு முறைகள்தான் சிறந்த ஆயுதம். கைகளை சுத்தம் செய்த பின்பே கண் - காது - மூக்கு- வாய் ஆகிய இடங்களில் தொட வேண்டும். இந்நோய், முழுக்க முழுக்க சுவாசப் பாதை வழியாக பரவுகிறது. அதனால், முகத்திற்கு முகம் அருகில் செல்வதை தவிர்க்கவேண்டும். கட்டாயமாக பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டும்.

மூன்று அடி அல்லது நமக்கு முன்னும் பின்னும் நிற்பவர்கள் இருமுகிறார்கள் என்றால் 6 அடி இடைவெளியை கடைபிடிப்பது தற்போதைய தேவை. இதைவிட நோயை எதிர்த்து வெற்றிகொள்ள தடுப்பூசியே ஆயுதம். ஆனால் தடுப்பூசி போடுவதற்கு முன் உங்கள் மருத்துவர்களிடம் சென்று, பரிசோதித்து அவர்களது ஆலோசனை மற்றும் அறிவுரையின்படி செலுத்திக்கொள்ளவும்” என்றவர் அதற்கான காரணங்களையும் கூறுகிறார். இந்தப் பரிசோதனைகள் ‘ஆப்ஷன்’தானே தவிர கட்டாயமல்ல.

தடுப்பூசி போடுவதற்குமுன் C-reactive protein (CRP), Co -SARS Antibody test, Erythrocyte Sedimentation Rate (ESR) ஆகிய மூன்றுவிதமான பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும் எனும் அவர் அவற்றால் என்ன பயன் என்பதையும் விளக்கினார்.

1. சி- ரீயாக்டிவ் -C-reactive protein பரிசோதனை: ருமட்டிக் (Rheumatic ), ஆஸ்துமா (asthmatic ) போன்ற நோய்த்தொற்று இருந்தால் உங்களது மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். பரிசோதனையில் பாதிப்பு அதிகமாக தெரிந்தால் தடுப்பூசி போடுவதை தள்ளிப்போடவேண்டும் என்று உங்கள் மருத்துவர் கூறலாம்.

2. அதேபோல் Co - SARS Antibody பரிசோதனை: ஏற்கனவே, முதல் அலையில் அசிம்டமேட்டிக் (asymptomatic) எனப்படும் அறிகுறிகள் வெளியில் தெரியாத கொரோனா தொற்று வந்து போயிருந்தால் உங்கள் உடம்பிலேயே கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி இருக்கும். ஏற்கனவே, அப்படியிருக்கும்போது திரும்பவும் தடுப்பூசி போடுவதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள் என்று உங்களது மருத்துவர் அறிவுறுத்தலாம்.

3. மூன்றாவதாக Erythrocyte Sedimentation Rate பரிசோதனை: இந்தப் பரிசோதனையில் உங்களுக்கு வேறு ஏதேனும் கடுமையான நோய்த்தொற்றுகள் இருக்கும் பட்சத்தில் அந்த நோயை கட்டுப்படுத்திவிட்டு பிறகு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்துவார்” என்றவர் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சித்த மருத்துவ மருந்துகள் சிறந்த காப்புத் தன்மையை உடலுக்கும் சுவாச மண்டலத்துக்கும் கொடுக்கும் என்று கூறுகிறார்.

“இயற்கை மருத்துவம் என்பது மழை வருவதற்கு முன் அணைக்கட்டுவது போலாகும். நோய் வருவதற்கு முன் இயற்கையான முறையில் ஒரு ஆறு மாதத்திற்கு முன்பே நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். உட்கொள்ளும் உணவு, சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளுங்கள்” என்றவர் என்னென்ன மருந்துகள் என்பதையும் பரிந்துரை செய்கிறார். “நுரையீரலுக்கு சக்தி தருவதற்காக நீல பச்சை பாசி (SPIRULINA) இது, அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும். இது, ஒரு திரவ ஆக்சிஜன் ஆகும். இரண்டாவது குளோரெல்லா (CHLORELLA VULGARIS ), இது ஒரு பசுங்கணிகம். இது பவுடர் மற்றும் மாத்திரை, சிரப் என அனைத்து வடிவங்களிலும் கிடைக்கும் . இதுவும் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். இவை, இரண்டும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கபட்டதாகும். விண்வெளி வீரர்களும் இதனை பயன்படுத்துவார்கள்.

அரசாங்கம் மக்களுக்கு சத்து மற்றும் ஜிங்க் வைட்டமின் சி அடங்கிய மாத்திரைகளை வழங்குகிறது. இந்த இரண்டு சத்துக்களையும் இயற்கையான முறையில் எடுத்துகொள்வது சரியாக இருக்கும்” என்றவர் அவற்றை எப்படி எடுத்துக்கொள்வது என்பது பற்றி கூறினார். “முதலில் நெல்லிக்காயை தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவும். அதில் வைட்டமின் சி உள்ளது. நெல்லிக்காய் சுவாச நோய்களுக்கு அதிகளவில் பயனுள்ளதாக இருக்கிறது. இரண்டாவது, சிட்ரஸ் அதிகம் இருப்பது ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தங்காய். இவை, அனைத்தும் சிட்ரிக் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றில், அதிகளவில் வைட்டமின் சி இருக்கிறது. இதனை உட்கொண்டால் சுவாசத்திற்கு நல்லது. ஆனால், அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தில் இதற்கு நேர்மாறாக சுவாச நோய் அடிக்கடி சளிப்பிரச்சினை உள்ளவர்கள் சிட்ரஸ் பழங்களைப் பயன்படுத்தவே கூடாது என்பார்கள். இது வெகுசிலருக்கு மட்டுமே பொருந்தும். மற்ற அனைவரும் சிட்ரஸ் பழங்கள், சாறுகள் உண்டபின் மிதமான சூட்டில் சுடுதண்ணீரை ஊதி ஊதி அருந்தினால் (குறைந்தது 100 மில்லி) சிட்ரஸ் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆஸ்துமாகாரர்கள் கூட தைரியமாக லெமன் ஜூஸ் குடிக்கலாம்.

ஜிங்க் எனப்படும் துத்தநாகம் அதிகம் இருப்பது பீன்ஸ், பாதாம் பருப்பு இரண்டிலும் இவை, இரண்டையும் எடுத்துக்கொண்டால் நமக்கு அதிகளவில் ஜிங்க் கிடைக்கும். அடுத்தது, வைட்டமின் டி அதிகளவில் இருப்பது பால், முட்டை, அதிகாலை சூரிய ஒளி. இதனால், நோய் எதிர்ப்பு புரதங்கள் இயற்கையாகவே உடலில் பெருகும். அடுத்து பச்சை பூக்கோசு (Broccoli) பார்ப்பதற்கு காலிஃபிளவர் மாதிரி இருக்கும். இது, வைட்டமின் சி, வைட்டமின் டி, ஜிங்க் உள்ளிட்ட மூன்று சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு உணவில் பயன்படுத்தத் தொடங்குங்கள்” என்றவர் இறுதியாக நாம் கேட்டதற்கு ஏற்ப முறையாக எப்படி கபசுர குடிநீர் அருந்துவது, கால இடைவெளி மற்றும் அதன் அளவு குறித்து விளக்க ஆரம்பித்தார்.

“டெங்கு, பன்றிக்காய்ச்சல் அதிகரித்தபோது நாம் அதிகளவில் நிலவேம்பு காஷாயம், கபசுர குடிநீர் இவை இரண்டையுமே பயன்படுத்தி வெற்றி கண்டோம். முதலில் நிலவேம்பு குடிநீரை, காலையில் வெறும் வயிற்றில் 60 மில்லி சாப்பிடவேண்டும், நிலவேம்புக் குடிநீரில் நிலவேம்பு மட்டுமல்ல; அதனுடன் மேலும் 7 வித காப்பு மூலீகைகள் உள்ளன. எனவே அரசால் லைசென்ஸ் பெற்று சித்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். அதேபோல் மாலையில் கபசுர குடிநீர் ஒரு வேளை எடுத்துக்கொள்ளவேண்டும். இதுவும் 60 மிலி மிதமான சூட்டில் அருந்தலாம். சின்னக் குழந்தைகள் என்றால் சிறிது பனங்கற்கண்டு போட்டுக் கொடுங்கள். தவறில்லை. இந்த இரண்டு காப்பு மருந்துகளையும் கஷாயமாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்தால் உடல் சூடாகி நீர்கடுப்பு மற்றும் சூட்டுக் கட்டிகள் வர வாய்ப்புள்ளது.

அடுத்து க்ளெவிரா (CLEVIRA ) என்கிற ஆயுர்வேத மருந்தினை மிதமான தொற்று கொரோனா பாதித்தவர்கள் (பாதிப்பின் அளவு 7 என்ற அளவில் இருப்பவர்கள்) எடுத்துக்கொள்ளலாம். இதற்கு உங்களுடைய மருத்துவரின் பரிந்துரை அவசியம். எவ்வளவு எடுப்பது என்பதை அவர்தான் முடிவு செய்வார். உங்கள் உடல் வாகினை வைத்து அவர் முடிவு செய்வார். மேலும் மிதமான தொற்று ஏற்பட்டவர்களுக்கு பிரம்மானந்த பைரவம், வசந்த குசுமாகரம், திப்பிலி, ஓமவாட்டர், கிராம்பு வாட்டர் இவை ஐந்தும் தமிழக சித்த மையங்களில் வழங்கப்படுகிறது. இவை அனைத்து கொரோனா தொற்று குறைந்து அளவில் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துகொள்ளலாம். ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் நேரடியாக மருத்துவமனையை அணுகி ஆக்சிஜன் எடுத்துக்கொண்டு சிகிச்சை பெறலாம். பயம் நோயை அதிகப்படுத்தும். தைரியம் நோய்முதல் நாடியை குறைக்கும்” என்கிறார் சித்தமருத்துவர் சண்முகம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction