காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்.
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முதல் அணியாக அரைஇறுதிக்கு முன்னேறியது.
இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின்போது பந்தை காலால் தடுக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, கால் இடறி கீழே விழுந்தார். இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து உலகக்கோப்பை தொடரின் அரைஇறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அரைஇறுதிப் போட்டியிலும் அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் உலகக்கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்படுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.