தற்போது நடைபெற்று வரும் G.C.E.சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன் G.C.E. உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
G.C.E.O/L பரீட்சை முடிந்து பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்திற்கு குறைந்தது 03 மாதங்கள் ஆவதால், இக்காலப்பகுதியில் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்படுவதால், அவர்கள் படிப்பைத் தொடர்வதில் நாட்டம் குறைவாக இருப்பதுடன், இது பல்வேறு சமூக பிரச்சினைகள் உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது.
இதன்படி, G.C.E.O/L பரீட்சைகள் முடிந்தவுடன் பாடசாலைகளில் உயர்கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது பொருத்தமானது என அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தற்போது நடைபெற்று வரும் G.C.E.சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புக்களை உடனடியாக ஆரம்பிக்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு அட்டவணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.