மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இவர்கள் மீது கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.
கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கனடா இவ்வாறு தடைகளை விதித்துள்ளது.
அதனடிப்படையில், கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படுவதுடன், அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆயுதப் போராட்டம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் மனித உரிமை மோசமாக மீறப்பட்டுள்ளமையால், இலங்கைவாழ் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமையால், சர்வதேச சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக கனடா கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக கனடா வௌிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசாரிப்பதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சிற்கு இன்று காலை அழைக்கப்பட்டுள்ளார்.