கிராமப் பகுதிகளுக்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
திருகோணமலை பகுதியில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புல்மோட்டை நிலாவெளி, சம்பல் தீவு மற்றும் ஆனந்த குளம் ஆகிய பகுதிகளை இணைக்கும் குடிநீர் விநியோகத்திற்கான குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கையை நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
67.3 மில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியின் ஊடாக மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 28 கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டதாகும்.
இந்த திட்டம் நிறைவடைந்தவுடன் 300ற்கும் அதிகமான புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதுடன், திருகோணமலை நகரம் மற்றும் அதை அண்டியுள்ள கிராமப் பகுதிகளுக்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதேவேளை, திருகோணமலை, கந்தளாய் ஆகிய நகரங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்துக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.
தற்போதைய நிலவரம் மற்றும் விஸ்தரிப்புக்கான தேவைப்பாடுகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.