முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கைப் பிரஜைகள் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டு பின்னர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு விடுவிக்கப்பட்டனர்.
இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இறுதி அனுமதி கிடைத்ததும், சிறப்பு முகாமை நடத்தும் வருவாய்த்துறையினர் அவர்களை விடுவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் மீண்டும் கொழும்பு செல்வதற்காக போலீஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை விமானத்தில் ஏறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு அனைத்து பயண ஆவணங்களையும் இலங்கை அதிகாரிகள் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்திய உச்ச நீதிமன்றம் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டதை அடுத்து, நவம்பர் 12, 2022 முதல் திருச்சியில் உள்ள திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அருகில் செயல்படும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நான்கு இலங்கைப் பிரஜைகளில் மூவரும் அடங்குவர். சிறப்பு முகாமில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட சுதந்திரராஜா என்கிற சாந்தன், சிறுநீரகக் கோளாறால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிப்ரவரி 21ஆம் தேதி உயிரிழந்தார்.