ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சனிக்கிழமை (மே 25) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
நல்லூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், இது எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் ஜனாதிபதி தமக்கு விளக்கமளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்திகள் மற்றும் வடமாகாண மக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.