ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையின் பொது அவசரகால நிலை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேஷ வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர், டாக்டர் நந்திகா குமநாயக்க வெளியிட்டுள்ளார்.
'தித்வா' புயலால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், நாட்டில் இயல்பு நிலையைப் பேணுதல் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து வழங்குதல் ஆகிய நோக்கங்களுடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரச கூட்டுத்தாபனம், அரசாங்கத் திணைக்களம், உள்ளூராட்சி அதிகாரசபை, கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளைகளால் வழங்கப்படும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மின்சார விநியோகம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு விநியோகம், சுகாதார சேவைகள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பும் நீட்டிக்கப்பட்டுள்ளது.