ஆசிரியர் தொழிலில் பிரவேசிப்பவர்கள் எதிர்கால சந்ததியினருக்காக தம்மை அர்ப்பணிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒழுக்கம் இன்றி ஒரு நாட்டில் கல்வி வளர்ச்சியடையாது எனவும் குறிப்பிட்டார்.
காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் பாடசாலைக் கல்விக்கு இடையூறு விளைவிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அறிவித்த அவர், இதனை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
“நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரும் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பள்ளிக் கல்வியை சீர்குலைக்கக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கைகளை முன்மொழியுமாறு நான் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்,'' என்றார்.
பாடசாலைகள் மூடல் அல்லது வேலைநிறுத்தம் என்பனவற்றால் பிள்ளைகளின் கல்வி தடைபடக் கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார். "எங்கள் நடவடிக்கைகள் எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டும்."
கணினி மயமாக்கப்பட்ட ஆசிரியர் இடமாற்ற முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“பதவி உயர்வு மற்றும் ஆசிரியர்களை நடத்துவதில் நியாயம் நிலவ வேண்டும். முன்னோக்கிச் செல்லும்போது, எதிர்ப்பைத் தூண்டினாலும், இந்த முன்னணியில் வலுவான நடவடிக்கைகளை எடுப்போம்."
"எங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தைப் பாதுகாக்க நாம் எதிர்கொள்ள வேண்டிய உண்மை இதுதான்," என்று அவர் கூறினார்.
இன்று (03) அலரிமாளிகையில் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் மற்றும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.