இரஷ்யாவின் இருவேறு பகுதிகளில், இரயில் பாலங்களில் நடந்த வெடிப்புக்கள் காரணமான அனர்த்தங்களில் இதுவரை 7பேர் பலியாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
நேற்று (மே31), இன்று ( ஜுன் 1) நடந்த இரண்டு பாலங்களின் வெடிப்புகளுக்கும் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இருக்கலாம் எனும் சந்ததேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் விபத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இரஷ்ய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
முதலாவது விபத்து, மே 31 அன்று உள்ளூர் நேரப்படி 22:50 மணிக்கு, பிரையன்ஸ்க் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ரயில்வே பாலம் இடிந்து விழுந்து, பயணிகள் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் உயிரிழந்தும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் சுமார் 180 மீட்புப் பணியாளர்கள் ரயிலின் சேதமடைந்த பெட்டிகள் மற்றும் என்ஜின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றொரு விபத்து ரஷ்யாவின் ஜெலெஸ்னோகோர்ஸ்க் மாவட்ட குர்ஸ்க் பகுதியில் , இன்று ஜூன் 1 உள்ளூர் நேரம் அதிகாலை 3:00 மணியளவில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிந்த பாலத்தில் பயணித்த ரயில், பாலத்தின் அடியில் உள்ள நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்துள்ளது என்று அறிவிக்கப்படுகிறது.
இந்த இரண்டு பாலங்களும் வெடிப்புகள் காரணமாக இடிந்து விழுந்ததாகவும், இவை பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக நடந்திருக்கலாம் எனவும், விபத்துக்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.