free website hit counter

கடந்த காலத் தவறுகளைத் திருத்தி முன்னோக்கிச் செல்வோம்: விசேட உரையில் கோட்டா!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“கடந்த காலத்தின் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு, எமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சரியான திட்டத்துடன் உறுதியாகச் செயற்படும்போது மட்டுமே, சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நாட்டு மக்களுக்கான விசேட உரையை ஜனாதிபதி நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஆற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் மட்டுமன்றி அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட்-19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. இதனால், நாட்டின் அந்நியச் செலாவணி வீழ்ச்சி உட்பட அபிவிருத்தி பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று கருதப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் பொறுப்பை அன்று தாம் பொறுப்பெடுத்தோம். அதேபோன்று, நாடு தற்போது முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்தும் மீண்டுவந்து மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நான் எப்போதும் ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுகிறேன். எதிர்காலத்துக்கான திட்டத்தை வகுக்கும் போது, கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது.

இந்நிலையில், கடந்த காலத்தின் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு, எமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சரியான திட்டத்துடன் உறுதியாகச் செயற்படும்போது மட்டுமே, சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும்.

இலங்கையின் வரலாற்றை எழுதும்போது, நாம் கடந்து செல்லும் இந்தக் காலப்பகுதி, எவ்வளவு கஷ்டமானது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும் போதும், அந்தக் கஷ்டங்களுக்கு மத்தியிலும், நாம் வெற்றியுடன் முன்னோக்கிச் செல்கின்றோமா என்பதைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு எமது கைகளிலேயே உள்ளது.” என்றுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction