‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அப்படத்தை அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் – த்ரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்.10ம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதாவது, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’ என்ற தன்னுடைய 3 பாடல்களை அனுமதியின்றி ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தியுள்ளதால் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும், இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் 7 நாட்களுக்குள் படக்குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.