யாழ்ப்பாணம், இணுவில் என்பது ஒரு அழகிய சைவத் தமிழ் பாரம்பரியம் மிக்க கிராமம். அதே போல் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். பிரபலமான மங்களவாத்தியக் கலைஞர்களளும், மகாவித்துவான் யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் முதல் அன்மைக்காலப் பிரபலம் வாகீசன் வரை, தங்கள் திறமைகளினால் பெருமை சேர்த்துள்ளனர். இவைகளைப் போலவே இணுவிலுக்குப் பெருமை சேர்ப்பது வரலாற்றுச் சிறப்புமிகு, இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப் பெருமஞ்சம்.
1891-ம் ஆண்டளவில் இக்கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்ட ஆறுமுகம் சந்நியாசியார் (பெரிய சந்நியாசியார்) என்பவரின் முயற்சியால் 1910-ல் மஞ்சம் செய்யும் பணிகள் தொடங்கின.இதற்காக இந்தியாவிலிருந்து தலைசிறந்த சிற்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, மிகுந்த கலைநயத்துடன் இது செதுக்கப்பட்டது.மஞ்சத்தின் பணிகள் நிறைவடைந்து 1912-ம் ஆண்டு முதன்முதலாக வீதியுலா (வெள்ளோட்டம்) விடப்பட்டது.இதன் அசாத்தியமான உயரமும், கலை நுணுக்கங்களும் காரணமாக , மக்களால் இது "உலகப் பெருமஞ்சம்" என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளில் இந்த மஞ்சம் வீதியுலா வருவது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் இதில் எழுந்தருளுவார். இது மரத்தினால் செய்யப்பட்ட அதி நுட்பமான ஒரு கலைப்படைப்பு. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளும், பிரம்மாண்டமான தோற்றமுமே இதற்கு "உலகின் மிகப்பெரிய மஞ்சம்" என்ற பெருமையைத் தேடித்தந்துள்ளன.
தைப்பூசத்தன்று வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட இந்த மஞ்சம், இணுவில் கந்தசுவாமியாரின் வீதிகளில் வலம் வரும்போது ஒரு மாபெரும் தேரைப் போலக் காட்சியளிக்கும்.தைப்பூசத் திருநாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி ஆடியும் முருகப்பெருமானுக்குத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள். குறிப்பாக இரவு வேளைகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்தின் அழகு காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
இதனை வாசிக்கும் நீங்கள் ஈழத்தைச் சார்ந்தவர்களாயின், இந்தக் கலைப்பாரம்பரியத்தின் சிறப்பினைப் பெருமிதத்துடன் அறிமுகம் செய்து வையுங்கள். அது உங்கள் வரலாற்றுக் கடமையும் கூட. அதேபோல் ஈழத்தின் இளைய தலைமுறையினர்கள் உங்கள் வாழ்வில் ஒரு தடலையேனும் நேரில் பார்த்துவிட வேண்டிய ஒரு பெறுமதி மிக்க கலைப் பொக்கிஷம்.
